ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அருகில், சேலத்தை சேர்ந்த சந்திரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில், தனியார் தங்கும் விடுதியின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் இன்று தொழிலாளர்கள் ஈடுப்பட்டுகொண்டிருந்தபோது திடீரென அருகில் இருந்த மண் சிகரத்தில் இருந்து மண் சரிவு ஏற்பட்டு மஞ்சக்குட்டை கிராமத்தை சேர்ந்த அந்தோணி மகன் தினேஷ்(வயது 24) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த ராமன் மகன் பாலமுருகன்(வயது 22) ஆகியோர் மீது மண் சரிந்தது. அவர்கள் இருவரும் உயிருடன் புதைந்தனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் இருவரையும் 1 மணி நேரத்திற்கு மேலாக தேடி மீட்டனர். அங்கிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களை சோதித்த பின் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் அங்கு ஆய்வு செய்ய வந்த ஏற்காடு வட்டாட்சியர் கிருஷ்ணனை இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விதிமுறைகளை மீறி பாறைகள் கம்பரசர் மற்றும் வேட்டு வைத்து உடைக்கப்பட்டு கட்டமானம் நடந்து வருவதை கண்டுகொள்ளமால் இருந்ததும் உயிரழப்பிற்கு காரணம் என்றும், மலைப்பகுதியில் தங்கும் விடுதி கட்ட விதிமுறைகளை மீறி அனுமதி அளித்த ஏற்காடு பி.டி.ஓ.வையும் கண்டித்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வட்டாட்சியர் கிருஷ்ணன் பொறுப்பின்றி பேசியதால், இறந்தவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் சாலைமறியிலில் ஈடுப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த சேலம் ஊரக ஏ.எஸ்.பி. சுஜித்குமார் அவர்களை சமாதனம் செய்ததையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
அதையடுத்து இடத்தின் உரிமையாளர் மற்றும் ஏற்காடு பி.டி.ஓ. சம்பவ இடத்திற்கு வரவேண்டும்,மேலும், ஏற்காடு வட்டாட்சியர் மற்றும் ஏற்காடு பி.டி.ஓ. மீது வழக்கு பதிவு செய்யும்வரை பிரேதத்தை எடுக்க விடமாட்டோம் என, இறந்தவர்களின் உறவினர்கள் கூறினர். அவர்களிடம் ஏ.எஸ்.பி.சுஜித்குமார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். – நவீன் குமார்.
