இலங்கை யாழ் நகரில் இரு மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு!- சிறீலங்கா காவல் துறையினரின் கொலை வெறி!

natra raja -poun rajsl yal  tamil students நடராசா கஜன்.

இலங்கை, யாழ் நகரில் 20.10.2016 அதிகாலை கிளிநொச்சியைச் சார்ந்த 23 வயதுடைய உயர்கல்வி மாணவன் நடராசா கஜன் மற்றும் கந்தரோடையைச் சார்ந்த 24 வயதுடைய மாணவன் பவுன்ராஜ் சுலக்சன் ஆகிய இருவரும் கோரமான முறையில் சிங்கள பேரினவாத காவல்துறையால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவ்விரு யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான இப்படுகொலை இனப்படுகொலை எண்ணத்தையே சுட்டிக்காட்டுகின்றது.

இப்படுகொலையை மூடி மறைக்க சம்பவம் நடந்த இடத்துக்கு யாரையும் செல்ல அனுமதிக்காமல், வாகன விபத்தில் தான் இரு மாணவர்களும் இறந்துள்ளார்கள் என ஆரம்பத்தில் காவல்துறை அதிகாரிகள் பொய் சொல்ல எடுத்த முயற்சி, மருத்துவ பரிசோதனைகளாலும், சம்பவம் நடந்த அருகாமையில் வசிப்பவர்களாலும் முறியடிக்கப்படுள்ளது.

கொல்லப்பட்ட ஒரு மாணவனின் குடும்பத்தாரிடம் காவல்துறை அதிகாரிகள் ரகசியமான முறையில் மாணவனின் அடக்க நிகழ்வுக்கு நிதி தருவதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை தருவதாகவும் கூறியுள்ளார்கள். மாணவனின் குடும்பம் இவ்உதவியை முற்றாக நிராகரித்துள்ளது.

அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்படாத சாதாரண சூழலில் காவல்துறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள வேண்டுமாயின் முறையாக அதற்குரிய அனுமதி உயர் மட்டத்தில் எடுக்கப்பட்டு உத்தரவு வழங்கப்பட்ட பின்னரே மேற்கொள்ள முடியும்.

ஆனால், சிறீலங்கா காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோகமானது, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட உயர்மட்ட உத்தரவுக்கமைவாகவே நடைபெற்று இருக்கின்றதென்பதால் கொலையினை மேற்கொண்டு அதனை மூடிமறைக்க நினைத்த இலங்கை அரசிடமிருந்தே இதற்கான நீதியினை எதிர்பார்க்க முடியாதென்பதால் இப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று உலகமெங்கும் உள்ள பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி  வருகின்றன.

-வினித்.