லைபீரிய கொள்கலன் கப்பல் எம்வி எம்எஸ்சி எல்எஸ்ஏ 3 கேரள கடற்பகுதியில் மூழ்கியதைத் தொடர்ந்து, இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி) முழு அளவிலான மாசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கையைத் தொடங்கியது. இந்தக் கப்பல் மே 25, 2025 அன்று கேரளாவின் ஆலப்புழாவிலிருந்து தென்மேற்கே சுமார் 15 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளானது. கப்பல் மூழ்கிய சில மணி நேரங்களுக்குள், ஐசிஜி கண்காணிப்பு விமானம் அந்த இடத்தில் கப்பலிலிருந்து கசிந்த எண்ணெய் படலத்தைக் கண்டறிந்தது. ஏற்கனவே மாசுபாட்டுக்கு எதிராகப் போராடும் கட்டமைப்பில் நிறுத்தப்பட்டுள்ள ஐசிஜி கப்பல் சாக்ஷம் உடனடியாக அனுப்பப்பட்டது. ஐசிஜி டோர்னியர் விமானம் வான்வழி மதிப்பீடுகளை நடத்தி, பாதிக்கப்பட்ட மண்டலம் முழுவதும் எண்ணெய் கசிவு பரவலை கண்டறிந்தது.
மே 25 அன்று காலை வேளையில், எண்ணெய் படலம், கப்பல் மூழ்கிய இடத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்கே வேகமாக நகர்ந்து செல்வது காணப்பட்டது. கடல் கொந்தளிப்பான சூழ்நிலையும், பலத்த காற்றும் மீட்பு முயற்சிகளை மிகவும் சவாலானதாக மாற்றியது. ஆபத்தான சூழ்நிலை இருந்தபோதிலும், 100க்கும் மேற்பட்ட சரக்கு கொள்கலன்கள் அந்தப் பகுதியில் மிதந்தன, சில உடைந்து அவற்றின் உள்ளடக்கங்களை வெளியிட்டன. ஐ.சி.ஜி தீவிரமான செயல்பாடுகளைத் தொடர்ந்தது. பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கடந்து செல்லும் அனைத்து கப்பல்களும் திருப்பி விடப்பட்டுள்ளன, மேலும் மிதக்கும் குப்பைகள் மற்றும் சாத்தியமான வழிசெலுத்தல் ஆபத்துகள் காரணமாக கப்பல்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.ஜி வான்வழி சோதனைகள் மற்றும் சிறப்பு சிதறல் உபகரணங்களைப் பயன்படுத்தி கண்காணிப்பு மற்றும் கசிவு தணிப்பு முயற்சிகளை தீவிரப்படுத்தியது. இரண்டு கடல் ரோந்து கப்பல்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பிற்காக தளத்தில் உள்ளன.
கொச்சியில் உள்ள வணிக கடல்சார் துறை, கப்பல் நிறுவனத்துக்கு வணிகக் கப்பல் சட்டம், 1958 இன் கீழ் மாசு பொறுப்பு எச்சரிக்கையை வெளியிட்டது. கொள்கலன் மீட்பு, எண்ணெய் அகற்றுதல் மற்றும் சுற்றுச்சூழல் சுத்தம் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடற்கரையை சுத்தம் செய்வதற்குத் தயாராக இருக்கவும், கரையில் ஒதுங்கக்கூடிய எந்தவொரு சரக்குகள் அல்லது குப்பைகளையும் கையாள வேண்டாம் என்றும் உள்ளூர் சமூகங்களை எச்சரிக்கவும் கேரள மாநில நிர்வாகத்திற்கு கடலோரக் காவல்படை அறிவுறுத்தியுள்ளது.
எம்.பிரபாகரன்