தமிழக அரசு, இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக, திருட்டு மணலை தடுத்து, சட்டப்பூர்வமல்லாத மணல் குவாரிகளை மூடி, மணலை நியாயமான விலையில் மக்களுக்கு வழங்க முறையான செயல்திட்டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும்.
குறிப்பாக ஆற்றில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதும், மணல் திருடப்படுவதும் நீடிக்கிறது. தமிழக அரசு இதனை கண்டும் காணாமல் இருப்பது முறையற்றது.
தமிழக அரசு, சமீபத்தில் வெளியிட்ட புதிய 13 மணல் குவாரிகளில் மணல் எடுக்க அனுமதித்தால் நதிநீர் போக்கில் மாற்றம் ஏற்பட்டு நிலத்தடி நீர் முற்றிலும் வரண்டு போக வாய்ப்புண்டு என தெரிவிக்கின்றனர். எனவே இந்த 13 மணல் குவாரி விவகாரத்தில் தமிழக அரசு முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தமிழகத்தில் சட்டப்பூர்வமல்லாத கல்குவாரிகளில் கருங்கல் வெட்டி எடுக்கப்படுவதும் சட்டத்திற்குப் புறம்பானது.
எனவே முறையான அனுமதி உள்ள கல்குவாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு சரியாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட வேண்டும்.
முறையான அனுமதி இல்லாமல் செயல்படும் கல்குவாரிகளை உடனடியாக முட வேண்டும்.
தமிழகத்தில் மணல் தடுப்பாடு நிலவி வருகிறது. இதனால் கட்டுமானத்தொழில் பாதிக்கப்படுவதோடு, அதிக விலைக்கு மணலை குறுக்கு வழியில் வாங்குகிறார்கள். ஆனால் சாதாரண ஏழை, எளிய மக்கள் அடிப்படைத் தேவையான வீடு கட்டுவதற்கு மணல் கிடைக்காமல், அதிக விலை கொடுத்து மணலை வாங்க முடியாமல் மிகவும் சிரமத்தில் இருக்கிறார்கள்.
எனவே தமிழக அரசு அத்தியாவசியத் தேவையான மணல் விவகாரத்தில் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும், பொது மக்களுக்கு தரமான மணல் நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் சட்டப்பூர்வமாக, முறையாக மணல் குவாரிகளை இயக்க வேண்டும், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்