பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று புதுதில்லியின் பாரத் மண்டபத்தில் எழுச்சி பெறும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்விற்கு வருகை தந்த அனைத்து பிரமுகர்களையும் அன்புடன் வரவேற்ற பிரதமர், வடகிழக்கு பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார். பாரத் மண்டபத்தில் சமீபத்தில் நடைபெற்ற அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை நினைவு கூர்ந்த அவர், இன்றைய நிகழ்வு வடகிழக்கில் முதலீட்டின் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார். இந்த உச்சிமாநாட்டிற்கு தொழில்துறை தலைவர்களின் குறிப்பிடத்தக்க வருகையை பிரதமர் எடுத்துரைத்தார். இந்தப் பிராந்தியத்தில் உள்ள வாய்ப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார். அனைத்து அமைச்சகங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து, ஒரு செழிப்பான முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டினார். வடகிழக்குப் பிராந்தியத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், செழிப்புக்குமான தமது உறுதிப்பாட்டை மீண்டும் அவர் எடுத்துரைத்தார்.
உலகின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட நாடாக உள்ள இந்தியாவின் நிலையை சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, வடகிழக்குப் பகுதி மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பகுதி என்றார். வர்த்தகம், பாரம்பரியம், ஜவுளி, சுற்றுலா ஆகியவற்றில் இப்பிராநதியம் பரந்த ஆற்றலைக் கொண்டுள்ளதை அவர் எடுத்துரைத்தார். பிராந்தியத்தின் பன்முகத்தன்மை அதன் மிகப்பெரிய பலமாகும் என்று அவர் கூறினார். வடகிழக்குப் பகுதி ஒரு செழிப்பான உயிரிப் பொருளாதாரம், மூங்கில் தொழில், தேயிலை உற்பத்தி, பெட்ரோலியம், விளையாட்டு, திறன், சுற்றுச்சூழல் சுற்றுலா ஆகியவற்றுக்கான வளர்ந்து வரும் மையமாக உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இந்தப் பிராந்தியம் கரிம பொருட்களின் உற்பத்திக்கு வழி வகுத்து வருவதாகவும், ஆற்றலின் சக்தியாக இவை திகழ்கின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். வடகிழக்குப் பகுதி அஷ்டலட்சுமியின் சாரத்தை உள்ளடக்கியது எனவும், இது செழிப்பையும் வாய்ப்பையும் தருகிறது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். இந்த வலிமையுடன், ஒவ்வொரு வடகிழக்கு மாநிலமும் முதலீட்டுக்கும், தலைமைத்துவத்திற்குமான தனது தயார்நிலையை எடுத்துரைத்து வருவதாக அவர் கூறினார்.
வெற்றிகரமான இந்தியாவை அடைவதில் நாட்டின் கிழக்குப் பகுதியின் முக்கியப் பங்கை வலியுறுத்திய பிரதமர், வடகிழக்குப் பகுதி மிக முக்கியமான அங்கமாக உள்ளது என்று தெரிவித்தார். இந்த அரசைப் பொறுத்தவரை, கிழக்கு என்பது ஒரு திசை மட்டுமல்ல எனவும், பிராந்தியத்திற்கான கொள்கைக் கட்டமைப்பை வரையறுக்கும் ஒரு வலுவான அம்சம் என்றும் அவர் கூறினார். இந்த அணுகுமுறை கிழக்கு இந்தியாவை, குறிப்பாக வடகிழக்கு பகுதியை, இந்தியாவின் வளர்ச்சிப் பாதையின் மையத்தில் வைத்துள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 11 ஆண்டுகளில் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள சிறப்பான மாற்றங்களைப் பிரதமர் எடுத்துரைத்தார். முன்னேற்றம் புள்ளிவிவரங்களில் மட்டும் பிரதிபலிக்கவில்லை எனவும், அவை களத்தில் உறுதியாக பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார். இந்தப் பிராந்தியத்துடனான அரசின் ஈடுபாடு கொள்கை நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டது என்று அவர் தெரிவித்தார். வடகிழக்குப் பகுதியின் மக்களுடன் ஒரு இதயப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர் கூறினார். இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் மத்திய அமைச்சர்கள் வடகிழக்குப் பகுதிக்கு 700-க்கும் மேற்பட்ட முறை பயணித்து நலத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பிரதமர் கூறினார். இந்தப் பகுதியின் தன்மையைப் புரிந்துகொள்வதற்கும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும், இந்த அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தினார். உள்கட்டமைப்புத் திட்டங்கள் வெறும் செங்கல், சிமெண்ட் மட்டுமல்ல எனவும், உணர்ச்சிபூர்வமான இணைப்பிற்கான வழிமுறையாக அவை உள்ளன என்றும் அவர் எடுத்துரைத்தார். கிழக்குப் பகுதியை பாருங்கள் என்பதிலிருந்து கிழக்குப் பகுதியில் ச செயல்படுங்கள் என்று மாறியுள்ளதாக அவர் மீண்டும் எடுத்துரைத்தார். இந்த அணுகுமுறை சிறந்த முடிவுகளைத் தருகிறது என்று அவர் கூறினார். வடகிழக்குப் பகுதி ஒரு காலத்தில் ஒரு எல்லைப் பகுதியாக மட்டுமே கருதப்பட்டது என்றும், அது இப்போது இந்தியாவின் வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
சுற்றுலாத் துறையை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதிலும் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும் வலுவான உள்கட்டமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, நல்ல தரமான சாலைகள், மின்சார உள்கட்டமைப்பு, சரக்குப் போக்குவரத்து கட்டமைப்புகள் ஆகியவை எந்தவொரு தொழிலுக்கும் முதுகெலும்பாக அமைகின்றன என்று கூறினார். இது தடையற்ற வர்த்தகம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை எளிதாக்குகிறது என்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார். உள்கட்டமைப்புதான் வளர்ச்சியின் அடித்தளம் என்றும், அரசு வடகிழக்கில் ஒரு உள்கட்டமைப்பு புரட்சியைத் தொடங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பிராந்தியத்தின் கடந்த கால சவால்களையும் அவர் விளக்கினார். ஆனால் இப்பகுதி இப்போது வாய்ப்புகளின் பூமியாக உருவெடுத்து வருவதாகப் பிரதமர் கூறினார். அருணாச்சலப் பிரதேசத்தில் சேலா சுரங்கப்பாதை, அசாமில் பூபேன் ஹசாரிகா பாலம் போன்ற திட்டங்களை மேற்கோள் காட்டி, இப்பகுதியில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். கடந்த பத்து ஆண்டுகளில் 11,000 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகள் அமைத்தல், விரிவான புதிய ரயில் பாதைகள், விமான நிலையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குதல், பிரம்மபுத்திரா, பராக் நதிகளில் நீர்வழிகளை மேம்படுத்துதல், நூற்றுக்கணக்கான மொபைல் கோபுரங்களை நிறுவுதல் உள்ளிட்ட முக்கிய முன்னேற்றங்களையும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். மேலும், 1,600 கிலோமீட்டர் நீளமுள்ள வடகிழக்கு எரிவாயு விநியோக அமைப்புத் திட்டம் நிறுவப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். இது தொழில்களுக்கு நம்பகமான எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்கிறது என அவர் கூறினார். நெடுஞ்சாலைகள், ரயில்வேக்கள், நீர்வழிகள், டிஜிட்டல் இணைப்பு என அனைத்தும் வடகிழக்கு மாநிலங்களின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துகின்றன என்று அவர் கூறினார். இப்பகுதியானது தொழில்களுக்கு ஒரு வளமான நிலமாக உள்ளது என்றும், அடுத்த பத்தாண்டுகளில், இந்தப் பிராந்தியத்தின் வர்த்தகத் திறன் கணிசமாகப் பெருகும் என்றும் அவர் கூறினார். ஆசியான் அமைப்பின் நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக அளவு தற்போது சுமார் 125 பில்லியன் டாலர்களாக உள்ளது என்றும், வரும் ஆண்டுகளில் இது 200 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இது வடகிழக்குப் பகுதியை ஒரு உத்திசார் வர்த்தக மையமாகவும், ஆசியான் சந்தைகளுக்கான நுழைவாயிலாகவும் நிலைநிறுத்துகிறது என அவர் கூறினார். பிராந்திய இணைப்பை மேம்படுத்த உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் எடுத்துரைத்தார். இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலையின் முக்கியத்துவத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார். இது மியான்மரிலிருந்து தாய்லாந்துக்கு நேரடிப் போக்குவரத்தை ஏற்படுத்தும் எனவும் தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் இணைப்பை வலுப்படுத்தும் என்றும் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். கொல்கத்தா துறைமுகத்தை மியான்மரின் சிட்வே துறைமுகத்துடன் இணைக்கக் கூடிய, மிசோரம் வழியான கலடன் பல்வகைப் போக்குவரத்துத் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான அரசின் முயற்சிகளைப் பிரதமர் எடுத்துரைத்தார். இந்தத் திட்டம் மேற்கு வங்கம், மிசோரம் இடையேயான பயண தூரத்தை கணிசமாகக் குறைக்கும் எனவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
எம்.பிரபாகரன்