ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன் கருதி ரிசர்வ் வங்கி தங்க நகைக் கடன் பெறுதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தங்க நகைக் கடன் பெற ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் மட்டுமல்ல சிறு, குறு தொழில் செய்பவர்களும், விவசாய பெருங்குடி மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதிலும், வங்கியில் உடனடி கடன் பெறுவதிலும் மிகுந்த சிரமப்படும் சாராண மக்கள், தங்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன்பெற தனியார் மற்றும் அரசு வங்கிகளையே பெரிதும் நாடுகிறார்கள். அதோடு வங்கியில் தங்க நகைக்கடன் பெறுவது பாதுகாப்பானதாகவும், குறைந்த வட்டியில் கிடைப்பதாலும் அவற்றை பெரிதும் நம்பி இருக்கிறார்கள்.

விவசாயிகள் 75% பேர் தங்கள் உடனடி கடன் தேவைக்கு கூட்டுறவு வங்கிகளையும், தனியார் மற்றும் அரசு வங்கிகளையுமே அணுகுகிறார்கள். ஆனால் தற்பொழு ரிசர்வ் வங்கி தங்க நகையின் மீது கடன்பெறுவதில் கடும் கட்டுப்பாடு விதித்து இருப்பது அவர்களால் கடனே பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தங்க ஆபரணங்கள் பெரும்பாலும் தங்கள் முன்னோர் வழியிலும், தாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய நகைகளாகவே இருக்கும் அதற்கு உரிய ஆதாரங்களை வைத்து இருப்பது இயலாத காரியம்.

மேலும் நகை அடனமான கடன் காலக்கெடு முடியும் போது அவற்றின் முழ தொகையையும் செலுத்தி மீட்ட பிறகுதான் மீண்டும் அடமானம் வைக்க வேண்டும் என்று தற்பொழுது ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஏற்கனவே வட்டியை மட்டும் செலுத்திவிட்டு நகைக்கடனை மாற்றி அமைக்கும் வசதியிருந்தது, ஆனால் தற்பொழது அவ்வாறு செய்ய முடியாது. அதனால் உரிய தொகை கிடைக்காமல் நகைகளை மீட்க முடியாமலேயே போய்விடும் நிலை ஏற்படும்.

ஏழை எளிய, நடுத்தர மக்கள் மட்டுமல்ல, விவசாயிகள் மற்றும் சிறு, குறு தொழில் செய்பவர்கள் நலன் கருதி, தங்க நகைக் கடனை அனைவரும் எளிதாக பெற ரிசர்வு வங்கி உரிய பரிசீலனை செய்து கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply