திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டூர், அம்மன் நகர் பகுதியில் வசித்து வரும் பெண் வங்கி ஊழியர் ஒருவர் கடந்த 10 தினங்களுக்கு முன்பு பணி முடித்து வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது இரு சக்கர (Pulsar) வாகனத்தில் வந்த நபர்கள் அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். தங்கச் சங்கிலியைப் பறிக்கொடுத்த அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டார். அதற்குள் திருடர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அரவிந்த் பனாவத், திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவுச் செய்தனர்.
இந்நிலையில் இந்த குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், திருவெறும்பூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அரவிந்த் பனாவத் மேற்பார்வையில், திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் தலைமைக் காவலர்கள் ஹரிஹரன், அருண் மொழி வர்மன், நல்லேந்திரன், ராஜேஷ், சதீஷ் குமார், கணேசமூர்த்தி,
நிர்மல் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை பின் தொடர்ந்து சென்ற தனிப்படையினர், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம், துவாக்குடி, வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்த மணிகண்டகுமார் மற்றும் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரி பகுதியைச் சேர்ந்த கௌஷிக் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் திருவெறும்பூர் கோகுல் நகர் மற்றும் கடலூர் மாவட்டம் புவனகிரி, சிதம்பரம் ஆகிய இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
மேலும், கடலூர் மாவட்டம், புவனகிரி செயின் பறிப்பில் வாகனம் ஓட்டியது மயிலாடுதுறையை சேர்ந்த டைட் என்பவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரைப் பற்றிய விவரங்களை புவனகிரி போலீசாரிடம், திருவெறும்பூர் போலீசார் தெரிவித்ததை அடுத்து அவரை புவனகிரி போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றச்சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாள் காவல் நிலைய எல்லையில் கடந்த ஆண்டு காணாமல் போனது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து தங்க நகைகள் மற்றும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு அந்தந்த மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் விஷம்போல் ஏறி வருவதால் வழிப்பறி, செயின் பறிப்பு மற்றும் ஆதாயக் கொலைகள்.. போன்ற விரும்பத் தகாத சம்பவங்கள் நாடு முழுவதும் காவல்துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
சட்டம் – ஒழுங்கு, ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல், பொதுக்கூட்டம், மாநாடு, போக்குவரத்துச் சீரமைப்பு, நீதிமன்றப் பணிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு… இப்படி இதற்கு மட்டுமே பாதுகாப்புப் பணிகளில் காவல்துறையினர் கூடுதல் நேரம் செலவிட வேண்டிய நெருக்கடியிலும், கட்டாய நிர்ப்பந்தத்திலும் இருப்பதால் நாடு முழுவதும் ஆங்காங்கே ஒரு சில விரும்பத் தகாத குற்றச்சம்பவங்கள் நிகழ்கிறது.
எனவே, குற்றத் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் கூடுதலான காவலர்களைப் பணியமர்த்தி பொது மக்களின் நலன் காப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சரும், உள்துறை அமைச்சருமான மு. க. ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் உத்தரவிட வேண்டும்.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040