ஆயுதப் படைகளின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில், முப்படைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் இன்று பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சூரத்கர் ராணுவ நிலையம் மற்றும் நாலியா விமானப்படை நிலையத்திற்கு வருகை புரிந்தார். வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் மீள்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவர் துருப்புக்களுடன் உரையாடினார்.
வீரர்களின் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் உயர் மன உறுதியைப் பாராட்டிய அவர், எதிர்கால அச்சுறுத்தல்களுக்கு திறம்பட பதிலளிக்கும் அவர்களின் திறனில் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
முப்படைத் தளபதியுடன் தென்மேற்கு மண்டலத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மன்ஜிந்தர் சிங், தென்மேற்கு விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் ஆகியோர் இருந்தனர். ஆபரேஷன் சிந்தூரின் போது வீரர்கள் காட்டிய முன்மாதிரியான துணிச்சலை அங்கீகரிக்கும் வகையில் இந்த வருகை பெருமைக்குரிய உணர்வு நிரம்பியதாக இருந்தது. இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட சமீபத்திய மற்றும் வலுவான வான் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. இந்த வருகையின் போது மூத்த ராணுவத் தளபதிகளுடன் ஜெனரல் சவுகான் விவாதங்களையும் நடத்தினார்.
நடவடிக்கையின் சுறுசுறுப்பான கட்டத்தில் வீரர்களின் அபாரமான வீரம் மற்றும் தொழில்முறைத்தன்மையை ஜெனரல் சவுகான் பாராட்டினார். மேற்கத்திய எதிரியின் பாதுகாப்பை மீறும் பல முயற்சிகளை முறியடிப்பதில் அவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு, உறுதியான தைரியம் ஆகியவற்றைப் பாராட்டினார். அவர்கள் ராணுவ தொழில்முறையின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதாகக் கூறினார். எந்தவொரு சவாலுக்கும் தீர்க்கமான சக்தியுடன் பதிலளிக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை ஜெனரல் சவுகான் வலியுறுத்தினார்.
படைகளுக்கு இடையேயான கூட்டு முயற்சியைப் பாராட்டிய ஜெனரல் சவுகான் உள்ளூர் சிவில் நிர்வாகத்தின் ஆதரவிற்கும் தனது நன்றியைத் தெரிவித்தார், இது போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் ராணுவம் – சிவில் கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
அவரது இந்த வருகை அதன் ஆயுதப் படைகளுக்கு நாட்டின் நன்றியை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், ஒற்றுமை, தயார்நிலை மற்றும் அசைக்க முடியாத தேசிய உறுதிப்பாட்டை வலுப்படுத்தியது.
திவாஹர்