மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் மற்றும் பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று சிவில் அதிகாரிகள் பட்டியல், 2025- ஐ மின் புத்தக வடிவில் வெளியிட்டார் – இது நாடு முழுவதும் பணியாற்றும் இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரிகள் குறித்த விவரங்கள் அடங்கிய டிஜிட்டல் தொகுப்பாகும்.
இந்த வெளியீடு சிவில் பட்டியலின் 70-வது பதிப்பாகவும், முழுமையான டிஜிட்டல் வடிவத்தில் வழங்கப்படும் ஐந்தாவது பதிப்பாகவும் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
மின் புத்தகத்தை வெளியிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், இந்திய ஆட்சிப்பணி நாட்டில் உள்ள சில சிறந்த மனங்களை தொடர்ந்து ஈர்த்து வருவதாகவும், இந்தியாவின் கூட்டாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கூறினார். வெளிப்படைத்தன்மைக்கான ஒரு முக்கிய கருவியாக சிவில் பட்டியல் திகழ்வதாக அவர் தெரிவித்தார்.
டாக்டர் ஜிதேந்திர சிங், மின்னணு சிவில் பட்டியலில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தேடல் விருப்பம் உள்ளதாக கூறினார். இந்த மேம்படுத்தப்பட்ட பட்டியல் பணி முறை மற்றும் பிற இலக்கு அரசு திட்டங்களுக்கு பொருத்தமான அதிகாரிகளை அடையாளம் காண உதவும் என்றும் குறிப்பிட்ட தேடல்களை அனுமதிக்கும் என்றும், அத்தகைய அம்சங்களுக்கான அணுகல் சரியான முறையில் கட்டுப்படுத்தப்படுவதை உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதன் பொருத்தத்தையும் பயன்பாட்டையும் பராமரிக்க டிஜிட்டல் பட்டியலை தொடர்ந்து புதுப்பிப்பதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் வெளியிடப்பட்ட இந்த மின் புத்தகத்தில், ஜனவரி 1, 2025 அன்று வரை புதுப்பிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளின் விரிவான விவரங்கள் உள்ளன. அவர்களின் பெயர், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு, எந்த மாநிலத் தொகுதி, பணியிடம், சம்பள நிலை, கல்வித் தகுதிகள் மற்றும் ஓய்வு பெறும் தேதிகள் உட்பட இதில் இடம் பெற்றுள்ளன. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஓய்வு பெறும் அதிகாரிகளின் எண்ணிக்கை மற்றும் 1969 முதல் நியமனத் தரவுகளையும் வழங்குகிறது. முதல் முறையாக, அதிகாரிகளின் புகைப்படங்கள் டிஜிட்டல் ஆவணத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
அமைப்புகளை நவீனமயமாக்குதல் மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சியை அமைச்சர் விவரித்தார். அச்சுப் பிரதிகளை அச்சிடுவதை நிறுத்துவதன் மூலம், துறையானது அரசு செலவினங்களை மிச்சப்படுத்துகிறது . சுற்றுச்சூழலுக்கு உகந்த நிர்வாக நடைமுறைகளுக்கு பங்களிக்கிறது. இந்த டிஜிட்டல் முயற்சியை வெளியிடுவதில் வெற்றிகரமான முயற்சிக்கு செயலாளர் மற்றும் துறையின் முழு குழுவினரையும் அவர் பாராட்டினார்.
2025 பதிப்பு 6,877 அதிகாரிகளின் மொத்த அங்கீகரிக்கப்பட்ட பலத்தை பிரதிபலிக்கிறது, 25 மாநில கேடர்களில் பொறுப்பில் உள்ள 5,577 அதிகாரிகள் குறித்த விவரங்கள் அடங்கியுள்ளன.
இந்த நிகழ்வில் இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் தலைமை இயக்குநர் திரு. எஸ்.என். திரிபாதி, லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியின் இயக்குநர் மற்றும் தலைவர் திரு. ஸ்ரீராம் தரணிகாந்தி, மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை செயலாளர் திருமதி ரச்னா ஷா மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திவாஹர்