மத்திய மாநில அரசுகள் இயற்கைச்சீற்றமான சிறு இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழக அரசு, மாநிலத்தில் அவ்வப்போது ஏற்படும் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் விவசாயத்தொழிலைப் பாதுகாக்க, விவசாயிகளுக்கு உதவிகள் செய்ய வேண்டும். கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு அதிக வெப்பம் நிலவி, சூறாவளி காற்றும் வீசி சில இடங்களில் வெப்பச்சலனத்தால் மழை பெய்தது. தொடர்ந்து அவ்வப்போது பெய்தும் வருகிறது. இந்த திடீர் சூறாவளி காற்றால் ஈரோடு, கோவை, திருப்பூர், திருச்சி, தென்காசி, தேனி, சேலம், தூத்துக்குடி ஆகிய மாவட்டப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து அழிந்தது. ஒரு ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் செலவு செய்து, நடவு செய்து பல்வேறு பணிகளை செய்து வந்த விவசாயிகள் தற்போது கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். மேலும் பெற்ற பயிர்க்கடனை கட்டுவதற்கு வழி இல்லாமல், கடுமையான சிரமத்தில் உள்ளார்கள்.
பொதுவாக இது போன்ற சூறாவளி காற்றால் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதற்கான சட்டமும், விதிகளும் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் இன்னும் உருவாக்கப்படவில்லை. குறிப்பாக புயல், பெருமழை, வெள்ளம், வறட்சி மற்றும் பெரிய விபத்துகளுக்கு அரசால் பேரிடர் நிவாரண சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது.
வாழை மரத்திற்கு பயிர் காப்பீடு செய்தாலும் ஒரு வருவாய் கிராமம் முழுக்க சேதமோ, அழிவோ ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு பெற முடியுமே தவிர சூறாவளி காற்று, சூறைக்காற்று ஆகிய இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெற முடியாத நிலை உள்ளது. அதாவது பெரும் இடர்பாடுகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது போல சூறாவளி காற்று, சூறைக்காற்று போன்ற சிறு இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் இழப்பீடு கிடைக்க வேண்டும்.
இதற்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தில் உரிய திருத்தம் செய்தும், மாநில அரசுகளும் அதற்கான விதிகளை உருவாக்கியும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடைமுறையை உருவாக்க வேண்டும். இது தான் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோரிக்கையாகும்.
எனவே தமிழக அரசு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோரிக்கையை நிறைவேற்றவும், தற்போது பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா ரூ. 2 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா