பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் முறியடிக்க உலகம் ஒரே குரலில் பேச வேண்டும்: மக்களவை சபாநாயகர்.

ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. மில்டன் டிக்கை மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா வாழ்த்தினார். இன்று திரு. டிக்குடன் தொலைபேசியில் உரையாடிய திரு பிர்லா, “ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் புதிய பதவிக்காலத்திற்கு எனது வாழ்த்துகள்” என்று கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியாவுடன் ஆஸ்திரேலியாவின் ஒத்துழைப்பிற்காக திரு. டிக்கிற்கு திரு பிர்லா நன்றி தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா அளித்த ஆதரவை அவர் பாராட்டினார். பயங்கரவாதம் எங்கிருந்தாலும், அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் ஒழிக்க உலகம் ஒரே குரலில் பேச வேண்டும் என்று திரு பிர்லா வலியுறுத்தினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் மாண்புமிகு திரு அந்தோணி அல்பனீஸுக்கும் இடையிலான நட்பை திரு. பிர்லா நினைவு கூர்ந்தார். மேலும் திரு. அல்பனீஸின் இந்த பதவிக்காலத்தில் இந்திய-ஆஸ்திரேலிய இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதியில் குவாட் மற்றும் இருதரப்பு உச்சிமாநாடுகளுக்கு மாண்புமிகு திருஅந்தோணி அல்பனீஸை வரவேற்க இந்தியா ஆவலுடன் இருப்பதாக திரு பிர்லா கூறினார். திரு. டிக், சபாநாயகராகப் பதவி வகிக்கும் போது, ​​இந்திய-ஆஸ்திரேலிய நாடாளுமன்ற ஒத்துழைப்பு புதிய உயரங்களை எட்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply