பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையை பிரதமர் திரு நரேந்திர மோடி மறுவரையறை செய்துள்ளார் என்றும், இது தற்போது இந்திய மண்ணின் மீதான எந்தவொரு தாக்குதலும் ஒரு போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 2025 மே 15 அன்று ஸ்ரீநகரின் பாதாமி பாக் கண்டோன்மெண்டில் துணிச்சல்மிக்க இந்திய ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய அவர், இந்தியா எப்போதும் அமைதிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது என்றும், போரை ஒருபோதும் ஆதரித்ததில்லை என்றும், இருப்பினும், அதன் இறையாண்மை தாக்கப்படும்போது, பதிலளிக்க வேண்டியது அவசியம் என்றும் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஆதரித்தால், அது அதிக விலை கொடுக்கும் என்று அவர் கூறினார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா வரலாற்றில் எடுத்த மிகப்பெரிய நடவடிக்கை இது என்றும், அச்சுறுத்தலை ஒழிக்க எந்த அளவிற்கும் செல்ல வேண்டும் என்ற நாட்டின் உறுதிப்பாட்டிற்கு இது ஒரு சான்றாகும் என்றும் திரு ராஜ்நாத் சிங் கூறினார். ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை என்பதல்ல, மாறாக தேவைப்படும் போதெல்லாம் துணிச்சலான முடிவுகளை எடுப்பதில் இந்தியா வெளிப்படுத்திய உறுதிப்பாடாகும் என்று அவர் தெரிவித்தார். ஒவ்வொரு பயங்கரவாதிகளின் மறைவிடத்தையும் அடைந்து அவர்களை அழிப்போம் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாக இருந்தது. பயங்கரவாதிகள் இந்தியர்களை அவர்களின் மதத்தின் அடிப்படையில் கொன்றனர், அவர்களின் செயல்களுக்காக நாங்கள் அவர்களைக் கொன்றோம். அவர்களை ஒழிப்பது நமது தர்மம். நமது படைகள் மிகுந்த துணிச்சலுடனும் விவேகத்துடனும் பஹல்காம் சம்பவத்திற்காக பழிவாங்கின என்று அவர் கூறினார்.
பாகிஸ்தானில் மறைந்திருக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் அவர்களின் எஜமானர்களுக்கும் அவர்கள் எங்கும் பாதுகாப்பாக இல்லை என்ற தெளிவான செய்தியை ஆபரேஷன் சிந்தூர் அனுப்பியுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் மேலும் கூறினார். நமது படைகள் தங்கள் நோக்கம் துல்லியமானது என்பதை உலகிற்குக் காட்டியுள்ளன என்று அவர் கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா