நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,
நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உதகமண்டலத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் 143.69 கோடி ரூபாய் செலவில் 700 படுக்கைகளுடன் 8 தனித்துவமான கட்டடங்களை ஒன்றாக இணைக்கும் மையக் கட்டடம், வெளிநோயாளிகள் மருத்துவ சேவைகளுக்கான Block A மற்றும் B கட்டடங்கள், Block C-யில் 10 நவீன அறுவை சிகிச்சை அறைகள், Block D-யில் தீவிர மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகள், Blocks E, F, G & H ஆகியவற்றில் உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் வகையில் நான்கு பிரிவுகள், மலைவாழ் மக்களிடையே காணப்படும் இரத்தசோகை, சிக்கில்செல் அனீமியா மற்றும் தலசீமியா ஆகிய நிலைப்பாடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் Block-Fல் சிறப்பு மருத்துவப் பிரிவு, 20 படுக்கைகளுடன் 24 மணி நேரமும் விபத்து மற்றும் அவசர மருத்துவ சேவைகளான அவசர மருத்துவப் பிரிவு (Emergency Block) ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய மருத்துவமனை வளாகத்தில் அவசர மற்றும் திட்டமிட்ட அறுவை சிகிச்சைகளுக்குத் துணையாக அனைத்து வசதிகளும் கொண்ட இரத்த வங்கி, நோயாளிகளுக்கு சத்துள்ள உணவு வழங்குவதற்காக சமையலறை, அதிநவீன வசதிகளுடன் தானியங்கி சலவை இயந்திரம், உலர்த்தும் இயந்திரம் மற்றும் சலவை இயந்திரங்கள், தனியான பிரேதக் கூடம் (Mortuary Block) ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் இச்சிறப்புமிக்க நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 6.4.2025 அன்று திறந்து வைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் , மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்தும், அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது சிகிச்சைக்கு வந்த மக்கள், தங்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இம்மருத்துவமனையை திறந்து வைத்ததற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
எஸ்.திவ்யா