நாட்டிலேயே தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஐஐடி மெட்ராஸ், பி.டெக் பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலகின் சிறந்த தலைவர்களாக உருவாக்கத் தயாராகி வருகிறது.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தொடர்பான பி.டெக் படிப்பின் மூலம் மாணவர்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையில் உலகின் சிறந்த தலைவர்களாக உருவாக்கத் தயாராக உள்ளது. வரும் 2025-26 – ம் கல்வியாண்டில் இரண்டாவது தொகுதி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

என்ஐஆர்எப் தரவரிசையில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள கல்வி நிறுவனத்தின் இந்த இளங்கலைத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு, மாணவர்களுக்கு முக்கிய திறன்களையும், அறிவையும் வழங்கும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அடிப்படைகள் மற்றும் அதன் பயன்பாடுகளை எவ்வாறு உருவாக்குவது என்பதில் கவனம் செலுத்தும் வகையில் தொடக்க நிலையில் இருந்து இந்த பி.டெக் பட்டப்படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், உள்ளகப் பயிற்சிகள், இளங்கலை ஆராய்ச்சி வாய்ப்புகள் ஆகியவற்றையும், வலுவான தொழில்துறை இணைப்பையும் கொண்டுள்ளது. உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்களில் அடிப்படை ஆராய்ச்சி முதல் உற்பத்தி, சுகாதாரப் பராமரிப்பு போன்ற பயன்பாட்டுத் துறைகள் வரை பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

உலகளவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட பள்ளிகளில் ஒன்றாக இருக்கும் வகையிலும், தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு தொடர்பான கொள்கை குறித்து அரசுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஆலோசனை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியில் பி.டெக் படிப்பு வழங்கப்படுகிறது.

ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விரைவில் நடைபெறும்  ஜேஓஎஸ்எஸ்ஏ கவுன்சிலிங் போது இப்பாடத்திட்டத்தை தேர்வு செய்ய முடியம். ஜேஇஇ நுழைவுத் தேர்வு மூலம் 50 மாணவர்கள் இப்பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். ஐஐடி மெட்ராஸ் நடத்தும் பி.டெக் படிப்பில் செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வுத் துறையில் பி.டெக் பாடத்திட்டத்திற்கான பாடநெறி குறியீடு 412L: செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகும்.

இந்த பி.டெக். பாடத்திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வு என்பது விரைவாக வளர்ச்சியடைந்து வரும் துறையாகும். தொழில்துறை, ஆராய்ச்சி, சமூகத்தின் தேவை ஆகியவற்றுக்கு  ஏற்ப இதற்கான பாடநெறி கவனமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்வத்தைத் தூண்டும் எண்ணற்ற சவால்கள் உள்ளன. மாணவர்கள் இப்பாடத்திட்டத்தில் சேர்வதன்  மூலம் பெரிதும் பயனடைவதுடன், தங்களின் வளமான எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ள முடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த பி.டெக். பட்டப்படிப்பு, கல்வி சார்ந்த நெகிழ்வுத்தன்மையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் துறை சார்ந்தும், வெளியிலும் பல்வேறு தேர்வுப் பாடங்கள் மூலம் தங்கள் கற்றல் பயணத்தை வடிவமைக்க முடியும். பேச்சு மற்றும் மொழி தொழில்நுட்பம், கணினி அடிப்படையிலான நுணுக்கமான அம்சங்களை ஆராய்வது முதல் கட்டுப்பாடு, கண்டறிதல், நேரத் தொடர் பகுப்பாய்வில் பயன்பாடுகளை ஆய்வு செய்வது வரை, மாணவர்கள் தங்களது தனிப்பட்ட விருப்பத்திக்கு ஏற்ப ஆர்வமுள்ள பகுதிகளில் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.

இப்பாடத்திட்டத்தின் தனித்துவ அம்சங்களை எடுத்துரைத்த, ஐஐடி மெட்ராஸ் வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியின் தலைவர் பேராசிரியர் பி.ரவீந்திரன், “செயற்கை நுண்ணறிவு என்பது மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாகும் என்றார். அடுத்து வரும்  தலைமுறையினருக்கும் வரையறுக்கக் கூடிய தொழில்நுட்ப வளர்ச்சியாக இது இருக்கும் என்றும், வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி அனைத்து விதமான செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க அனுமதிக்கிறது என்றும் அவர் கூறினார். மாணவர்கள் செயற்கை நுண்ணறிவின் அடிப்படை அம்சங்கள் குறித்து போதியஅளவு அறிந்திருப்பது உறுதி செய்யப்படும் என்றார். இதன் மூலம் மாணவர்கள் ஏதேனும் ஒரு ஆராய்ச்சிப் பணியை மேற்கொள்ள விரும்பினால் தாங்களாகவே அதற்கான விஷயங்களைத் தேர்ந்தெடுக்க முடியும்” என்றார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வுப் பாடத்திட்டம் துறை சார்ந்த நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு தொழில்களில் அதன் பயன்பாடுகளின் விரிவான தொலைநோக்குப் பார்வையை இப்பாடத்திட்டம் வழங்குகிறது. கணித அடிப்படைகள், தரவு அறிவியல் / செயற்கை நுண்ணறிவு /இயந்திரக் கற்றல், பயன்பாட்டுத் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பொறுப்பான வடிவமைப்பு ஆகியவற்றில் வலுவான முக்கியத்துவத்தை இப்பாடத்திட்டம் கொண்டிருக்கும்.

மாணவர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப்  பயன்பாட்டு அம்சங்கள் குறித்து தீவிரமாகக் கற்றுக் கொள்ளும் வகையில் பி.டெக் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப்  பாடத்திட்டம் உறுதி செய்யும். மாணவர்கள் தேர்வு செய்யும் இரண்டு பாடநெறிகளில் பாரம்பரிய பயன்பாடுகளுடன் தரவு அறிவியல் – செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அமைப்பு சார்ந்த பயன்பாடுகளும் அடங்கும். செயற்கை நுண்ணறிவில் பொறுப்பான வடிவமைப்பின் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது குறித்த படிப்புகளும் இதில் உள்ளன.

இந்த பி.டெக் பாடத் திட்டத்தின் முக்கிய பகுதிகளாக, நடைமுறைப் பயன்பாட்டில் கவனம் செலுத்துதல், நியாயமான, பொறுப்பான செயற்கை நுண்ணறிவு ஆகியவை அடங்கும். பல்வேறு களங்களில் உள்ள நடைமுறை சவால்களை சமாளிக்க தரவுப் பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் பயன்பாடு, புதுமை,  அதன் தாக்கம், மற்றும் பொறுப்புணர்வு போன்ற கொள்கைகளை ஏற்றுக்கொள்வது, தொழில்நுட்பத்தின் நெறிமுறை, சம அளவிலானப்  பயன்பாட்டை உறுதி செய்தல் ஆகியவையும் இதில் அடங்கும்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வில் விரிவான அடித்தளத்தை வழங்கும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துறையில் வெற்றி பெறுவதற்கு அவசியமான பல்வேறு பாடங்களையும் இது உள்ளடக்கியிருக்கிறது. நேரியல் இயற்கணிதம், கால்குலஸ் ஆகியவற்றின் அடிப்படை படிப்புகள் முதல் இயந்திரக் கற்றல், ஆழ்முறை கற்றல், ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு, போன்ற பல்வேறு சிறப்புத் தொகுதிகள் வரை, இத்துறை சார்ந்த எண்ணற்ற சவால்களைச் சமாளிக்க ஏதுவாக மாணவர்களுக்கு வலுவான கருவிப் பெட்டகமும் வழங்கப்படும்.

ஐஐடி மெட்ராஸ் – ஓர் அறிமுகம்

இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் என்ற தொழில்நுட்பக்க கல்வி நிறுவனம் 1959-ம் ஆண்டில் மத்திய அரசால் ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவன’மாகத் தொடங்கப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு பாடப் பிரிவுகளைச் சேர்ந்த 18 கல்வித் துறைகள், மேம்பட்ட இடைநிலை ஆராய்ச்சிக் கல்வி மையங்கள் மூலம் இக்கல்வி நிறுவனத்தின்  செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இக்கல்வி நிறுவனம்  பி.டெக்., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.டெக்., எம்.எஸ்., பிஎச்.டி., போன்ற வெவ்வேறு பிரிவுகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை வழங்குகிறது. ஐஐடிஎம் 650-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 10,000 மாணவர்களுடன் இயங்கும் உண்டு உறைவிடக் கல்வி நிறுவனமாகும். இங்கு 18 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். சிறப்பான பாடத்திட்டங்கள் மற்றும் ‘ஐஐடிஎம் இன்குபேஷன் செல்’ ஆகியவற்றின் மூலம், ஐஐடிஎம் தொழில் முனைவுக்கு  ஊக்கமளித்து வருகிறது.

2019-ம் ஆண்டில் இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினன்ஸ் கல்வி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்ட ஐஐடிஎம், மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தேசியக் கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் ‘ஒட்டுமொத்த’ப் பிரிவில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக அகில இந்திய அளவில் முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது. இதே தரவரிசைப் பட்டியலில் ‘பொறியியல் கல்வி நிறுவனங்கள்’ பிரிவிலும் 2016 – ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக இக்கல்வி நிறுவனம் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. 2023 – ம் ஆண்டில், தான்சானியாவின் ஜான்சிபாரில் ‘ஐஐடி மெட்ராஸ் ஜான்சிபார்’ என்ற சர்வதேச வளாகத்தை நிறுவிய முதல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ் உள்ளது.

Leave a Reply