இந்திய ராணுவத்தை நவீனமாக்குவதற்கும், போரில் காயமடைந்த அல்லது உயிரிழந்த வீரர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு நன்கொடை அளிப்பது தொடர்பாக ஒரு தவறான செய்தி வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. இந்த செய்தியில் அமைச்சரவை எடுத்த முடிவை மேற்கோள் காட்டி, இந்த திட்டத்தை முன்மொழிந்தவர் நடிகர் திரு அக்ஷய் குமார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய செய்தியில் உள்ள கணக்கு விவரங்கள் தவறானவை, இதனால் ஆன்லைன் நன்கொடைகள் செல்லத்தக்கதாகாது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மேலும் இதுபோன்ற மோசடி செய்திகளுக்கு பலியாகக்கூடாது.
போர் நடவடிக்கைகளின் போது உயிரிழந்த அல்லது ஊனமுற்ற வீரர்களுக்கு அரசு பல நலத்திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
2020-ம் ஆண்டில், ‘ஆயுதப் படைகள் போர் விபத்து நல நிதியை ‘ அரசு நிறுவியது, இது ராணுவ நடவடிக்கைகளில் உயிர் தியாகம் செய்யும் அல்லது படுகாயமடையும் வீரர்கள்/மாலுமிகள்/விமானப்படை வீரர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிதி உதவி வழங்கப் பயன்படுகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர் நலத் துறையின் சார்பாக இந்திய ராணுவம் இந்த நிதிக்கான கணக்குகளைப் பராமரிக்கிறது. பங்களிப்பை நேரடியாக ஆயுதப் படைகள் போர் விபத்து நல நிதியின் கணக்கில் செலுத்தலாம்.
எம்.பிரபாகரன்