ஒருவரின் சுயவிருப்பம் மறுக்கப்படுவது மரணத்திற்கு சமமானது; ஓரின சேர்க்கை குற்றமல்ல!- உச்ச நீதிமன்ற அமர்வு அதிரடி தீர்ப்பு.

ஓரினச் சேர்க்கை குற்றம் அல்ல என, இந்திய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும், ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டப்பிரிவு 377-யை ரத்து செய்வதாகவும் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம்,  அதற்கு 10 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் விதிக்கும் வகையில், 1861-ல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, இந்திய குற்றவியல் சட்டத்தின், 377-வது பிரிவின் கீழ், இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமாகும்.

இந்தச் சட்டப் பிரிவை எதிர்த்து, ‘நாஸ்’ அறக்கட்டளை என்ற அமைப்பு, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. டில்லி உயர் நீதிமன்றம், ‘இந்தச் சட்டப் பிரிவு சட்ட விரோதமானது’ என, 2009-ல் தீர்ப்பு அளித்தது.

டில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு, 2013-ல் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து, பல்வேறு பிரபலங்கள் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுக்களை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

இந்நிலையில், ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உறவு கொள்வதை அனுமதிப்பது குறித்து, நீதிமன்றத்தின் முடிவை ஏற்பதாக மத்திய அரசு கூறியது. அதே நேரத்தில், ‘இயற்கைக்கு புறம்பாக, சிறுவர் – சிறுமியர் மற்றும் விலங்குகளுடன் உறவு வைத்தால், அது குற்றமாகவே கருதப்படும் என்பதில் மாற்றம் செய்யக் கூடாது’ என, மத்திய அரசு கூறியிருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் இன்று (06.09.2018) தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறுகையில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உள்ளது. அரசியல் சாசன சமநிலை என்பது எண்ணிக்கையை கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. ‘ஒருவரின் சுயவிருப்பம் மறுக்கப்படுவது மரணத்திற்கு சமமானது. ஓரின சேர்க்கை குற்றமல்ல. ஓரின சேர்க்கைக்கு எதிரான 377 சட்டம் ரத்து செய்யப்படுகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

377-வது சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

அத்தீர்ப்பின் உண்மை நகல் நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Hon’ble Mr. Justice Dipak Misra
The Chief Justice Of India

Download [2.66 MB]

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. குமார் September 7, 2018 8:58 pm

Leave a Reply