அரசால் விதிக்கப்பட்ட தடையை மீறி வைகுண்டராஜன் தாது மணல் கடத்தல்! தமிழக அரசுக்கு ரூ.10000 கோடி இழப்பு : அவரது சகோதரர் குமரேசன் பேட்டி.  

dhdu manal

அரசால் விதிக்கப்பட்ட தடையை மீறி, வி.வி மினரல்ஸ் நிறுவன தொழிலதிபர் வைகுண்டராஜன் தாதுமணல் ஏற்றுமதி செய்கிறார். இதன் காரணமாக தமிழக அரசுக்கு ரூ10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவரது சகோதரர் குமரேசன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

தூதுக்குடியை சேர்ந்தவர் தொழிலதிபர் வைகுண்டராஜன். இவரது விவி மினரல்ஸ் நிறுவனம் மூலம் கனிமவளமுள்ள தாதுமணல் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். 

சென்னையில் இன்று வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன் திடீரென செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் அவருக்கு விதிக்கப்பட்ட தடையை மீறி  வைகுண்டராஜன் அவரது விவி மினரல்ஸ் நிறுவனம் மூலம் தொடர்ந்து தாது மணலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார் இந்த  நடவடிக்கையால் தமிழக அரசுக்கு ரூ10,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தாது மணல் எந்தெந்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதற்கான முழுமையான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இதுவரை தடையை மீறி 50 லட்சம் டன் அளவுக்கு தாது மணலை வைகுண்டராஜன் வெளிநாடுகளுக்கு கடத்தியுள்ளார். இந்த சட்ட விரோத நடவடிக்கையை அவர் ரவுடிகளின் பாதுகாப்புடன் நடத்தி வருகிறார்

இவ்வாறு  முறைகேடாக அள்ளப்பட்ட தாது மணல் 15 கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக இதுவரை 50 காவல்நிலையங்களில் புகார் கொடுத்துள்ளோம். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தாது மணல் கடத்தல் விவகாரத்தை தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு தடுக்க வேண்டும். மேலும் வைகுண்டராஜனின் சொத்துகளை முடக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குமரேசன் கூறினார்.

-கே.பி.சுகுமார்.