கர்நாடக இசைக் கலைஞரும், புகழ் பெற்றத் திரைப்படப் பாடகருமான கே.ஜே.யேசுதாஸ் இலத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் அகஸ்டைன் யோசப்க்கும், அலைசு குட்டிக்கும் மகனாக கேரளாவின் ஃபோர்ட் கொச்சியில் 10.01.1940-ல் பிறந்தார்.
அவரது தந்தை மலையாள செவ்விசைக் கலைஞரும் நடிகரும் ஆவார். துவக்கத்தில் இசைப் பயிற்சியை அவரிடமே கற்ற யேசுதாஸ், பின்னர் திருப்புனித்துறையில் இருந்த இசை அகாதெமியில் தனது இசைக் கல்வியைத் தொடர்ந்தார்.
சற்று காலம் வேச்சூர் அரிகர சுப்பிரமணிய அய்யரிடம் இசை பயின்ற பின்னர், செம்பை வைத்தியநாத பாகவதரிடம் மேல்நிலைப் பயிற்சி பெற்றார். இந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்றார்.
கே.ஜே.யேசுதாஸ், மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காளம், குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய், உருசி, அரபி இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். ஏழு முறை தேசிய விருது பெற்றுள்ளார். கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார்.
திரையிசைத் தவிர, கருநாடக இசைக் கச்சேரிகள் பல நிகழ்த்தியுள்ளார். சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
2006-ஆம் ஆண்டு சென்னை ஏ.வி.எம்.அரங்கில் ஒரே நாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இப்படி சாதி, மத பேதமின்றி உலகமே பாராட்டும் உன்னதமான இசைக் கலைஞர் கே.ஜே.யேசுதாஸை,
எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவராத நிலையில், எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், “பிரபல பாடகர் யேசுதாஸ் தாய் மதமான இந்து மதத்துக்கு மாறி இருந்தால் வரவேற்போம்” என சுப்ரமணியன் சுவாமி, பல லட்சம் பேர் பார்வையிடும் சமூக வலை தளமான தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது மதவெறியை வெளிப்படுத்தியுள்ளார்.
மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பதாக நம்புகிறவர் ஜேசுதாஸ். அவரைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஜேசுதாஸ் இந்து மதத்துக்கு மாறும் எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இதுபோன்ற செய்திகள் எப்படி வெளியாகின்றன எனத் தெரியவில்லை. இந்த செய்தியில் உண்மை எதுவுமே இல்லை என, கே.ஜே.ஜேசுதாஸ் மனைவி பிரபா வேதனை தெரிவித்துள்ளார்.
எனவே, நாட்டின் நல்லிணக்கத்திற்கும், நாட்டு மக்களின் அமைதிக்கும், இந்திய இறையாண்மைக்கும் ஊறுவிளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சுப்பிரமணியன் சுவாமியின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர் வகித்து வரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும், நாட்டு மக்களின் வரி பணத்தில் அவருக்கு வழங்கப்பட்டு வரும் உயர் பாதுகாப்பையும் உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இல்லையென்றால், பிரதமரின் அனுமதியோடுதான் சுப்பிரமணியன் சுவாமி இப்படி பேசி வருகிறார் என்று நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com