தாமோதர்தாசு முல்சந் மோதி, ஃகீரபேன் தம்பதிகளுக்கு, பிறந்த ஆறு குழந்தைகளில், மூன்றாவது குழந்தையாக பிறந்தவர் பிரதமர் நரேந்திர மோதி. பிரதமர் நரேந்திர மோதிக்கு, சோமா, பிரகலாத், பங்கஜ் என்ற 3 சகோதரர்களும், அம்ரூட், வசந்தி என்ற 2 சகோதரிகளும் இருக்கிறார்கள்.
இதில் சோமா என்பவர் சுகாதாரத் துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். பிரகலாத் என்பவர் அகில இந்திய நியாய விலைக்கடை விநியோகஸ்தர்கள் சங்க துணைத் தலைவராக இருக்கிறார். பங்கஜ் என்பவர் தகவல் தொடர்புத்துறையில் குமாஸ்தாவாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், அகில இந்திய நியாய விலைக்கடை விநியோகஸ்தர்கள் சங்க துணைத் தலைவராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோதியின் மூத்த சகோதரர், பிரகலாத் மோதி, நியாய விலைக் கடைக்காரர்களின் கோரிக்கைகளுக்காக வியாபாரிகளை திரட்டி 02.03.2015 அன்று மும்பையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியுள்ளார்.
மும்பை ஆசாத் மைதானத்தில் நடைப்பெற்ற இப்போராட்டத்தில், ஏராளமான வியாபாரிகள் திரண்டனர். அவர்கள் மத்தியில் பேசிய பிரகலாத் மோதி, தனது சகோதரர் பிரதமர் நரேந்திர மோதியின் அரசை கடுமையாக குறை கூறினார்.
நியாய விலை கடை விநியோகஸ்தர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1,000 கார்டுதாரர்களை ஒதுக்க வேண்டும் என்றும், கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். அரசும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை நிறைவேற்றவில்லை.
பாராளுமன்ற தேர்தலின் போது 75,000 நியாயவிலை கடை விநியோகஸ்தர்கள், உத்திரப் பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா வெற்றிக்காக பணிபுரிந்தோம். இதனால் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 இடங்களை பாரதிய ஜனதா கைப்பற்றியது.
ஆனால், டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவை எதிர்த்து நாங்கள் வேலை செய்ததால், பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்தது. 70 தொகுதிகளில் 3 இடங்களை மட்டுமே பாரதிய ஜனதாவால் கைப்பற்ற முடிந்தது.
இனியும் மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால், வர இருக்கும் உத்திரப்பிரதேசம், பீகார் மாநில சட்டசபை தேர்தல்களில் பாரதிய ஜனதா தோல்வியை தழுவும் என்றார்.
பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசுக்கு எதிராக, அவரது அண்ணனே போராட்டம் நடத்தியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in