திருட்டு மின்சாரத்தைப் பயன்படுத்தி, தண்ணீர் திருடிய தனியார் எஸ்டேட் முதலாளி!  

???????????????????????????????

???????????????????????????????

சேலம் மாவட்ட கலெக்டர் க.மகரபூஷணம் உத்தரவின் பேரில், நேற்று முதல் ஏற்காடு எஸ்டேட்டில் உள்ள தடுப்பணைகள் மற்றும் நீர் ஆதாரங்கள் குறித்து ஏற்காடு தாசில்தார் சாந்தி, சேலம் தெற்கு தாசில்தார் மணிவண்ணன், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர், வனதுறையினர், மின்சார வாரியத்தினர் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இன்று மால்கோ நிறுவனத்தில் 2 தடுப்பணைகள், நரசுஸ் எஸ்டேட்டில் 1 தடுப்பணை, மேரிலேண்ட் எஸ்டேட்டில் 1 தடுப்பணை, ராசி எஸ்டேட்டில் 2 தடுப்பணை, வேவர்லி எஸ்டேட்டில் 1 தடுப்பணை, லட்சுமி எஸ்டேட்டில் 1 தடுப்பணை, மேத்தா எஸ்டேட்டில் 1 தடுப்பணை, உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வு செய்யும் போது நடூரில் உள்ள  கண்ணப்பன் என்பவருக்கு சொந்தமான 300 ஏக்கர் மேரிலேண்ட் எஸ்டேட்டில், சட்டத்துக்கு புறம்பாக, அனுமதியின்றி, எஸ்டேட் வழியாக செல்லும் கரண்ட் லைனில் கொக்கி போட்டு நீண்ட காலமாக மின்சாரத்தை திருடி வருவது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இவ்வாறு திருடப்படும் மின்சாரத்தில் 1HP மோட்டார் பயன்படுத்தி  தண்ணீரை திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது அங்கு ஆய்வு செய்த குழுவினர் இவ்வாறு அப்பட்டமாக மின்சாரம் திருடப்படுவது மின்வாரியத்தினருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், இதனால் அரசாங்கத்தினருக்கு பல இலட்ச  ரூபாய்க்கு  மேல் நஷ்டம் ஏற்படும் என்றனர்.                                                              

 -நவீன் குமார்.