காவிரிப் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் ஆடிப்பெருக்கினை கொண்டாடும் வகையில், மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிட தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா உத்தரவு!

Hogenakkal_Tamil_Naduதமிழக மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை சீரோடும், சிறப்போடும் கொண்டாடும் வகையில், மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக தற்போது திறந்துவிடப்பட்டுள்ள 800 கனஅடி நீருடன், கூடுதலாக வினாடிக்கு 6,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாஆணையிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயம் செழிக்க வேண்டி காவிரி அன்னைக்கு மலர்தூவி வணங்கும் விழா எனப்படும் ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், 03.08.2014 அன்று வருகின்ற ஆடிப்பெருக்கு விழாவினை தமிழக மக்கள் சீரோடும், சிறப்போடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடும் வண்ணம், மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடுமாறு காவிரிப் பகுதி மக்களிடமிருந்தும், விவசாயிகளிடமிருந்தும் தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர்இருப்பு, மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீர்வரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, காவிரிப் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் ஆடிப்பெருக்கினை கொண்டாடும் வகையில், 27.07.2014 முதல் 03.08.2014 வரை மேட்டூர் அணையிலிருந்து, தற்போது குடிநீருக்காக திறந்துவிடப்பட்டுள்ள 800 கனஅடி நீருடன், கூடுதலாக வினாடிக்கு 6,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட தாம் ஆணையிட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

-சி.மகேந்திரன்.