மருத்துவ சிகிச்சைக்கு வழியில்லாமல் தமிழகம் வந்த இலங்கை அகதிகள்!

mullaitheervu familyஇலங்கை முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் படகு மூலம் 21.06.2014 அன்று அதிகாலை தமிழகத்தின் தனுஸ்கோடியை வந்தடைந்தனர்.

முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த அந்தோணி குரூஸ், இவரது மனைவி செல்வி மற்றும் இவர்களது குழந்தைகள் ரோமேரியா, ரியான்ச் ஆகிய நான்கு பேரும் தலைமன்னாரில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து, இலங்கை கடற்படையினரின் கண்ணில் படாமல் தப்பித்து கள்ளத்தனமாக படகு மூலம் தனுஸ்கோடிக்கு வந்துள்ளனர்.

இதுக் குறித்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலோர காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த கடலோர காவல்துறையினர், இலங்கையில் இருந்து வந்தவர்களை முகுந்தராயர் சத்திரம் காவல்துறை சோதனை சாவடிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, இலங்கையில் வேலை வாய்ப்பு கிடைக்க மிகவும் சிக்கலாக இருக்கிறது. தனது மனைவி செல்வி கிட்னி பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மனைவி செல்விக்கு சிகிச்சை அளிக்க போதுமான பணம் கிடைக்கவில்லை.

எனது உறவினர் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் இருக்கின்றனர். அவர்களின் உதவியுடன் இங்கு வந்து சிகிச்சை பெறலாம் என்பதால் தலைமன்னாரில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து படகு மூலம் தனுஸ்கோடிக்கு வந்தோம் என்று அந்தோணி குரூஸ் தெரிவித்தார்.

இவர்களிடம் மத்திய, மாநில உளவுப்பிரிவு போலிஸார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-சி.மகேந்திரன்.