தமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷவை, இந்தியாவுக்குள் அனுமதிக்காதே: சென்னையில் ஆர்ப்பாட்டம்!

chennaiஇந்திய மோடி அரசே! தமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷவை அழைக்காதே, இந்தியாவுக்குள் அனுமதிக்காதே! எனக் கோரி மே பதினேழு இயக்கம், சென்னையில் இன்று (25.05.2014) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு அருகில் நடைபெற்றது.

2009-ஆம் அண்டு ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்ஷவை இந்தியாவிற்கு வர அழைத்திருப்பது, தமிழர்களை அவமானப்படுத்தும் செயலாகவே இருக்கும் என மே பதினேழு இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசும், ராஜபக்ஷவும், இனப்படுகொலையாளிகள் என 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜேர்மனியில் கூடிய நிரந்த மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

இவ்வாறான சூழ்நிலையில், ராஜபக்ஷவை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என்று, உலகமெங்கும் வாழும் தமிழர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் செயற்பட்டு வருகின்றனர்.

chennai.jpg1இப்படியான நிலைமையில், இனப்படுகொலைக் குற்றவாளியை சிறப்பு விருந்தினராக இந்தியாவை ஆளப்போகும் பா.ஜ.க அழைத்திருப்பது இனப்படுகொலை குற்றவாளிகளை உலக அரங்கில் காப்பற்றும் செயலக அமையும். இதற்காகதான் ராஜபக்ஷவை பா.ஜ.க விரும்பி அழைக்கின்றதா? என்ற சந்தேகம் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது.

ராஜபக்ஷ அரசு இனப்படுகொலை அரசு எனவும், இலங்கையுடன், இந்தியா எந்த நட்புறவும் வைக்கக் கூடாது என்றும், ஜெ.ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, தமிழக மக்கள் சார்பில் ஏகமனதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனை மதிக்காமல் இந்திய நாட்டை ஆளப் போகும் பா.ஜ.க செயற்படுவது, இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

-ஆர்.பிரியதர்ஷிணி.