திருச்சி தி.மு.க மாநாட்டுக்கு சென்றபோது விபத்து: வணிகர் சங்கங்களின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மகன் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா படுகாயம்!

dmk car accident

தி.மு.க 10-வது மாநில மாநாடு நடக்கிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மகனும், தென் சென்னை மாவட்ட தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளருமான ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா தலைமையில் சென்னையில் இருந்து 10 பஸ், 4 கார்களில் இளைஞர் அணியினர், கல்லூரி மாணவர்கள் என சுமார் 500 பேர் நேற்றிரவு (14.02.2014) சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர்.

இன்று (15.02.2014) காலை திருச்சி அருகே ஆவட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, பிரபாகர் ராஜா சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது. இதில், கார் நிலை தடுமாறி சாலையின் குறுக்கே இருந்த சென்டர் மீடியனில் ஏறி இறங்கியது. பின் மரத்தில் மோதியது.

இதில், பிரபாகர் ராஜா, காரை ஓட்டிய ரெனால்டு வின்சென்ட் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர். உயிருக்கு போராடிய அவர்களை பின்னால் காரில் வந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் திமுக கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.