மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், 14 மாவட்டங்களை உள்ளடக்கிய மூன்று பலவழி ரயில் பாதைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, இன்று ரயில்வே அமைச்சகத்தின் மூன்று திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.10,783 கோடி ஆகும். இந்தத் திட்டத்தில், கரக்பூர் – ஜார்சுகுடா (பாக்தேஹி) 4-வது வழித்தடம், கட்னி – பென்ட்ரா சாலை 4-வது வழித்தடம், பிலாஸ்பூர் (உஸ்லாபூர்) – பென்ட்ரா சாலை 3-வது வழித்தடம் ஆகியவை அடங்கும்.

ரயில் வழித்தடத்தை மேம்படுத்தும் பணிகள், பயணிகளின் போக்குவரத்தை கணிசமாக அதிகரிக்கச் செய்வதுடன், ரயில்வேத் துறையின் செயல்பாட்டுத் திறனையும், சேவை சார்ந்த நம்பகத்தன்மையையும் அதிகரிக்க உதவிடும்.

இந்த பலவழி ரயில் மேம்பாட்டுத் திட்டங்கள், செயல்பாடுகளை நெறிப்படுத்தவும், கூட்ட  நெரிசலைக் குறைக்கவும் வழிவகுக்கும்.

இந்தத் திட்டங்கள், பிரதமர் திரு நரேந்திர மோடியின், புதிய இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளன. இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் விரிவான வளர்ச்சித் திட்டங்கள், அப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்தி, தற்சார்பு நிலையை அடையச் செய்யும்.

ஒருங்கிணைந்த திட்டமிடல், சம்பந்தப்பட்ட தரப்பினருடனான கலந்தாலோசனைகள் மூலம், பல்முனைப் போக்குவரத்து இணைப்பு,  சரக்குப் போக்குவரத்துத் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, பிரதமாரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் அடிப்படையில் இவை திட்டமிடப்பட்டுள்ளன. இத்திட்டங்கள், பயணிகள், சரக்குகள், சேவைகளின் போக்குவரத்திற்கு தடையற்ற இணைப்பை வழங்கும்.

Leave a Reply