தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார்.

பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கைது செய்தது. அவரது சகோதரர் அசோக் குமார் மற்றும் அவர் தொடர்புடைய நிறுவனங்களிலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அடுத்து அசோக் குமார் தலைமறைவானார்.

செந்தில் பாலாஜி சுமார் ஒன்றரை வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஆனாலும், அசோக் குமார் எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கிலும் அசோக் குமார் தலைமறைவானதைக் காரணம் காட்டி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என அமலாக்கத்துறை வாதம் வைத்தது.

இந்நிலையில் இலாக்க இல்லாத அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக செந்தில் பாலாஜி அறிவித்தார். இதனை அடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தது. சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்தவுடன் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

ஜாமினில் வெளிவந்த உடனே செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க வாய்ப்பு இல்லை என்றும், அமைச்சர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளை இவர் கலைத்து விடுவார் என்றும், இந்த வழக்கில் அமைச்சரை எதிர்த்து சாட்சியம் அளிக்க சாட்சிகள் அஞ்சுவார்கள் என்றும், எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

ஜாமினில் வெளியே வருவதற்காகத்தான் இலாக்கா இல்லாத அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். ஜாமீன் கிடைத்த உடனே மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இவ்வளவு அவசரமாக அமைச்சராக பதவி ஏற்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியை கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கடிந்து கொண்டனர். செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்புகிறாரா?! என்று நீதிமன்றம் அறிய விரும்புகிறது. எனவே, அவரது முடிவை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கிடுக்கிப்பிடி போட்டுள்ளனர்.

அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி என்ன பதில் அளிக்க போகிறார் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கை நேரமின்மை காரணமாக சிறப்பு அமர்வின் வழக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று (09.04.2025 புதன்கிழமை) அறிவித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணைக்கான வேறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ். அபய் ஓகா இன்று தெரிவித்தார்.

இந்நிலையில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத் துறை கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட 11 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதனை ஏற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோர் ஏப்ரல் 9 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார்.

இதன் அடிப்படையில் இரண்டு ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (09.04.2025 புதன்கிழமை) ஆஜரானார்.

Leave a Reply