தேசிய நெடுஞ்சாலைகளின் செயல்பாடுகள் மற்றும் மேலாண்மையை மாற்றுவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), சுமார் 40,000 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான டாஷ்கேம் பகுப்பாய்வு சேவைகளை (DAS) செயல்படுத்த உள்ளது. இந்த முன்னெடுப்பு, நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் உயர் தொழில்நுட்பம் மற்றும் தரவு சார்ந்த செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு (O&M) ஆகியவற்றின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (ML) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.
உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள் மற்றும் காணொளித் தரவுகளைப் பயன்படுத்தி, தொலைநிலைக் கண்காணிப்பு மற்றும் சாலை நிலை மதிப்பீடுகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அனைத்துப் பகுதிகளிலும் வாராந்திர விரிவான ஆய்வுகளை நடத்துவதற்காக, வழித்தட ரோந்து வாகனங்களில் (RPV) சிறப்பு டாஷ்போர்டு கேமராக்கள் பொருத்தப்படும். 30-க்கும் மேற்பட்ட வகையான குறைபாடுகள் மற்றும் முரண்பாடுகளைத் தானாகவே கண்டறிவதற்காக, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு/இயந்திர கற்றல் (AI/ML) பயிற்சி பெற்ற மாதிரிகள் பயன்படுத்தப்படும்.
சாலைப் பள்ளங்கள், சக்கரத் தடங்கள் மற்றும் கடுமையான விரிசல்களைக் கண்டறிவது உள்ளிட்ட சாலை மேற்பரப்பின் நிலையின் மீது முக்கிய கவனம் செலுத்தப்படும். கையாளப்படும் இந்த முறையானது, சேதமடைந்த அல்லது மங்கிப்போன பாதை அடையாளங்கள், விபத்துத் தடுப்புகள் மற்றும் செயல்படாத தெருவிளக்குகள் ஆகியவற்றை நிகழ்நேரத்தில் கண்டறிவதை உள்ளடக்கிய சாலை உபகரணங்களையும் கையாளும். சட்டவிரோத மையத்தடுப்புத் திறப்புகள், அங்கீகரிக்கப்படாத அறிவிப்புப் பலகைகள், மற்றும் சட்டவிரோத வாகன நிறுத்தம் அல்லது ஆக்கிரமிப்புகளைக் கண்காணிப்பதன் மூலம் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.
சாலைப் பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவதற்காக, சாலை அடையாளங்கள், நடைபாதைக் குறியீடுகள், சாலைக் கட்டைகள் மற்றும் நெடுஞ்சாலை விளக்குகளின் செயல்திறன் மதிப்பீட்டிற்காக, மாதத்திற்கு ஒரு முறையாவது இரவு நேரத்தில் வாராந்திர ஆய்வு நடத்தப்படும். நீர் தேக்கம், இல்லாத வடிகால் மூடிகள், தாவர வளர்ச்சி மற்றும் பேருந்து நிறுத்தங்களின் நிலை போன்ற பிற முக்கியப் பராமரிப்புப் பிரச்சினைகளும் இதில் உள்ளடக்கப்படும்.
அறிக்கைகளைத் திறம்படக் கண்காணிப்பதற்காக, முறையான தரவுக் கண்காணிப்பை உறுதிசெய்யும் வகையில் நாடு முழுவதும் ஐந்து மண்டலங்கள் வியூகரீதியாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நோக்கத்திற்காக, தரவு மேலாண்மை, செயற்கை நுண்ணறிவுப் பகுப்பாய்வு மற்றும் ஊடாடும் காட்சிப்படுத்தல் டாஷ்போர்டுகளுக்கான பிரத்யேக தொகுதிகளைக் கொண்ட ஒரு சிறப்பு தகவல் தொழில்நுட்பத் தளம் உருவாக்கப்படும். இந்தத் தீர்வு, காலப்போக்கில் சாலைகளின் நிலையை அருகருகே ஒப்பிட்டுப் பார்க்கவும் அனுமதிக்கிறது. இதன்மூலம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) பராமரிப்பு முன்னேற்றத்தைத் துல்லியமாகக் கண்காணிக்கவும், திறமையாகப் பழுதுபார்க்கவும் முடிகிறது. மேலும், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் முடிவுகள், தடையற்ற கண்காணிப்பு மற்றும் குறைபாடுகளை உரிய நேரத்தில் சரிசெய்வதை உறுதி செய்வதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மத்திய தரவு ஏரித் தளத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.
இந்த முன்னெடுப்பு, தேசிய நெடுஞ்சாலைகளின் தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் திறமையான செயல்பாடு மற்றும் மேலாண்மையை நோக்கிய ஒரு முக்கியப் படியாகும். செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் டாஷ்கேம் கண்காணிப்பைப் பயன்படுத்துவது, சரியான நேரத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பு முழுவதும் பயனர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தவும் உதவும்.
எஸ்.சதிஸ் சர்மா
