அசாமின் கோக்ரஜாரில் ரூ.4,570 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மோசமான வானிலைக் காரணமாக கோக்ரஜாருக்கு நேரடியாக பயணம் மேற்கொள்ள இயலவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், நிகழ்வில் பங்கேற்ற மக்களிடையே இதற்காக வருத்தம் தெரிவித்தார். பெருந்திரளாக மக்கள் கூடியிருப்பது பற்றி குறிப்பிட்ட அவர், இதன் மூலம் மக்களுக்கு தாம் கடன்பட்டிருப்பதாகவும், அர்ப்பணிக்கப்பட்ட சேவை மற்றும் பிராந்திய வளர்ச்சியின் மூலம் இதனை திரும்பத் தர விரும்புவதாகவும் கூறினார்.
அசாமின் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும், அதன் விரிவான முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும் இரட்டை என்ஜின் அரசு உறுதிபூண்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். தற்போதைய நிகழ்ச்சியின் போது, 4,500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறிய அவர், இதில் போடோலாந்து சாலை விரிவாக்க நெட்வொர்க் பணிக்கு 1,100 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக கூறினார்.
அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட காமாக்யா – சர்லப்பள்ளி அமிர்த பாரத எக்ஸ்பிரஸ் ரயில், குவஹாத்தி – நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை பிராந்திய போக்குவரத்து இணைப்பை ஊக்கப்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இதன் மூலம் வணிகமும், சுற்றுலாவும் ஊக்கம் பெறும் என்று அவர் கூறினார்.
ஒரு காலத்தில் வன்முறையும், ஆயுத மோதல்களும் எதிரொலித்த கோக்ரஜார் மலைக்குன்றுகள் தற்போது நல்லிணக்கத்திற்கு மாறியிருப்பதையும், காம், சிஃபுங் போன்ற பாரம்பரிய இசைக் கருவிகளின் ஒலியால் நிரம்பியிருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். போடோலாந்தும், அசாமும் தற்போது அமைதி மற்றும் வளத்திற்கான புதிய அத்தியாயத்தை எழுதுவதாக திரு மோடி கூறினார். வந்தே பாரத், ராஜதானி எக்ஸ்பிரஸ் ஆகியவை கோக்ரஜாரில் நின்று செல்வது இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சி நிலையின் அடையாளம் என்று குறிப்பிட்ட அவர், இதன் மூலம் வணிகமயமாக இது மாறும் என்று தெரிவித்தார்.
மக்களின் தொடர்ச்சியான ஆசிர்வாதங்களுடன் வளர்ச்சியடைந்த அசாம் என்ற தீர்மானம் நிச்சயமாக நிறைவேறும் என்று பிரதமர் கூறினார். புதிதாக தொடங்கப்பட்ட திட்டங்களின் வெற்றிக்கு திரு மோடி தமது நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
திவாஹர்
