கச்சத்தீவும்; புனித அந்தோனியார் தேவாலயமும்! என்று தீரும் இந்த அடிமை வாழ்வு! – டாக்டர் துரை பெஞ்சமின்.

50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரமாகவும்; தமிழர்களின் மிகப்பெரிய வரலாற்றுச் சின்னமாகவும் திகழ்ந்த கச்சத்தீவில் புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா 2026 பிப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது.

சிறப்பு திருப்பலி யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் அருட்தந்தை பி. ஜே. ஜெபரத்தினம், கொழும்பு பேராயர் மறைமாவட்டத்தின் அருட்தந்தை சம்பத், நெடுந்தீவு பங்குத் தந்தை ஆன்டன் அமலதாஸ் மற்றும் இந்தியாவின் சார்பில் தமிழ்நாடு சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை அருள் ஜோசப், இராமேஸ்வரம் பங்குத்தந்தை தோமஸ் பரிபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் ஸ்ரீலங்கா கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி அனுஷா பானகொட ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்தியாவின் சார்பில் எந்த அமைச்சரும் கச்சத்தீவு அந்தோனியார் ஆண்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் இவ்விழாவில் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 13,600 பேர் கலந்து கொண்டதாக ஸ்ரீலங்கா கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சகத்தின் மேற்பார்வையின் கீழ், ஸ்ரீலங்கா கடற்படை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவை இந்திய அரசு மற்றும் தமிழக அரசின் மேற்பார்வையில் உரிமையோடு முன்னின்று நடத்த வேண்டிய இந்தியாவைச் சேர்ந்த நமது தமிழ்நாட்டு மக்கள், அகதிகளைப் போல ஸ்ரீலங்கா கடற்படையினரின் கடுமையானச் சோதனைகளுக்கு பிறகு கச்சத்தீவுக்கு கண்ணீரோடு சென்று திரும்பி உள்ளனர்.

இந்திரா காந்தி அம்மையாரின் தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட சட்ட விரோத ஒப்பந்தத்தின் பேரில் கச்சத்தீவு இலங்கைக்கு அநியாயமாக தாரைவார்க்கப்பட்டது. இவற்றின் விளைவாக கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும், வழிபாட்டு உரிமையையும் இழந்து தவிப்பதோடு; இலங்கை கடற்படையினரின் காட்டுமிராண்டி தாக்குதலுக்கும்; சட்டவிரோத கைதுகளுக்கும் தொடர்ந்துப் பலியாகி வருகின்றனர். என்று தீரும் இந்த அடிமை வாழ்வு! இதற்கு இந்திய அரசு தான் பதில் சொல்ல வேண்டும்.

இதுத் தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பைக் ‘கிளிக்’ செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2022/03/26/70349/#google_vignette

Leave a Reply