குஜராத் மாநில அரசால் ராஜ்கோட்டில் உள்ள மார்வாடி பல்கலைக்கழகத்தில் 2026 ஜனவரி 11 முதல் 15 வரை ஏற்பாடு செய்யப்பட்ட துடிப்பான குஜராத் பிராந்திய கண்காட்சி 2026-ல், இந்தியாவில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் பங்கேற்றனர். இதில் மத்திய சுகாதார அமைச்சகம் அரங்கம் எண் 6-ல் ஒரு விரிவான சுகாதார அரங்கை நிறுவியது.
சுமார் 700 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த சுகாதார அரங்கம், ஆரோக்கிய பாரதம், உன்னத பாரதம்” என்ற கருப்பொருளைக் கொண்டு அமைக்கப்பட்டது. பொது சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதில் மக்களை மையமாகக் கொண்ட மத்திய அரசின் அணுகுமுறையை இது வெளிப்படுத்தியது.
இந்த அரங்கில் 12 திட்டப் பிரிவுகள் அடங்கிய 26 பகுதிகள் இடம்பெற்றிருந்தன. ஐந்து நாள் கண்காட்சியில், அரங்கில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான இலவச சுகாதார சேவைகள், பரிசோதனைகள், ஆலோசனைகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஹெச்ஐவி, மனநலம் குறித்த ஆலோசனைகள், ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்த தகவல்கள், சுகாதார தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வுத் தகவல்கள் வழங்கப்பட்டன. ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, கண், காது ஆரோக்கியத்திற்கான பரிசோதனைகள், முதியோர் சேவைகள் போன்றவையும் வழங்கப்பட்டன. மருத்துவ தகவல் சேவைகளுடன், நோய்த் தடுப்பு சுகாதாரம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
மத்திய சுகாதார அமைச்சகம், தொடர்ச்சியான புதிய நிகழ்வுகள், மாநிலங்களுடன் கூட்டு முயற்சிகள், நாடு முழுவதும் அனைவரையும் உள்ளடக்கிய தரமான சுகாதார முயற்சிகளை தொடர்ந்து செயல்படுத்துவது ஆகியவை மூலம் “ஆரோக்கிய பாரதம், உன்னத பாரதம்” என்ற தொலைநோக்கு இலக்கை அடைவதை நோக்கி உறுதியாகப் பயணிக்கிறது.
எஸ்.சதிஸ் சர்மா
