நாட்டில் நிகழும் அனைத்து வகையான பயங்கரவாத சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கும் அவை தொடர்பான பல்வேறு அம்சங்களை பகுப்பாய்வு செய்வதற்கும் தேவையான தரவுகளை சேகரிக்கும் பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளதென்று உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்புப் படையின் வெடிபொருள் தரவு மேலாண்மைக்கான தேசிய அமைப்பை காணொலி வாயிலாக தொடங்கிவைத்து அவர் உரையாற்றினார். கடந்த 6 ஆண்டுகளில் பல்வேறு வழிமுறைகள் உருவாக்கப்பட்டு தரவுகளை முறையாக சேகரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இத்தகைய தரவுகள் எதிர்காலத் தலைமுறையினருக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பதுடன் பயங்கரவாத செயல்கள் குறித்து விசாரணை நடத்தவும் உதவிடும் என்று அவர் கூறினார்.
பயங்கரவாத சம்பவங்களின் போது சேகரிக்கப்படும் ஆதாரங்கள் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து பகுப்பாய்வு செய்யும் வகையில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அடிப்படையிலான மென்பொருளை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
எஸ்.சதிஸ் சர்மா
