உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட நாட்டின் முதலாவது மாசு கட்டுப்பாட்டு கப்பலை பாதுகாப்பு அமைச்சர் இந்திய கடலோர காவல்படையில் இணைத்தார்.

கப்பல் கட்டுதல், கடல்சார் திறன் மேம்பாடு ஆகியவற்றில் தற்சார்பு என்ற இந்தியாவின் இலக்கில் மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, கோவா கப்பல் கட்டுமான நிறுவனம் (ஜி எஸ் எல்) வடிவமைத்துள்ள 2 மாசுக் கட்டுப்பாட்டு கப்பல்களில் முதலாவது கப்பலான சமுத்ரா பிரதாப் கப்பலை, கோவாவில் 2026 ஜனவரி 5 அன்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இந்திய கடலோர காவல் படையில் இணைத்தார்.

60 சதவீதத்திற்கும் அதிகமான உபகரணங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்திய கடலோர காவல்படையின் சமுத்ரா பிரதாப், இந்தியாவின் முதலாவது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு கப்பலாகும்.

இந்த கப்பல் இந்திய கடலோர காவல்படையில் இணைக்கப்பட்டதன் மூலம், மாசுக் கட்டுப்பாடு, தீயணைப்பு, கடல்சார் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்திய கடலோர காவல்படையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும். அத்துடன், இந்தியாவின் கடல்சார் மண்டலங்களில் கண்காணிப்பு திறனையும் வலுப்படுத்தும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி சூழல், கடினமான உற்பத்தி சவால்களை கையாள்வதற்கான திறன்களை பெற்றுள்ளதாகவும், 90 சதவீதம் அளவிற்கு உள்நாட்டு உபகரணங்களைக் கொண்டு கப்பல்களை வடிவமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய கடலோர காவல்படையின் சமுத்ரா பிரதாப், மாசுக் கட்டுப்பாட்டிற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அப்பணியுடன் அதன் பங்களிப்பு நிறைவடையாது என்று கூறிய அவர், கடலோர ரோந்துப் பணி, கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் இக்கப்பல் திறன்பட செயல்பட்டு ஒரே தளத்தில் பல்வேறு திறன்களை ஒருங்கிணைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply