தேசிய பல்லுயிர் ஆணையம் செம்மர விவசாயிகளுக்கு ரூ. 45 லட்சத்தை விடுவித்தது.

தேசிய பல்லுயிர் ஆணையம் (என்பிஏ), ஆந்திர மாநில பல்லுயிர் வாரியத்தின் மூலம், அம்மாநில  விவசாயிகளுக்கு ரூ 45 லட்சத்தை  விடுவித்துள்ளது.  இந்த நிதி வழங்கலுடன், இந்தியாவின் ஒட்டுமொத்த நிதிப் பகிர்வு மற்றும் அணுகல்  நிதி விடுவிப்பு இப்போது ரூ 143.5 கோடியை கடந்துள்ளது.

இந்த முயற்சி, செம்மரம் பயிரிடும் விவசாயிகளுக்குக் கிடைக்கும் பொருளாதார வாய்ப்புக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம், விவசாயிகள்  இரட்டை வருமானப் பலன்களைப் பெறுகின்றனர். முதலாவதாக, பயிரிடப்பட்ட செம்மரக் கட்டைகளை சட்டப்பூர்வமாக விற்பனை செய்வதன் மூலம்; இரண்டாவதாக, 2002-ம் ஆண்டு உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட்ட பொறிமுறையின் கீழ் பணப் பலன்கள் பெறுவதன் மூலம். இவ்வாறு, ஏபிஎஸ் கட்டமைப்பு, உலகளவில் மதிப்புமிக்க ஒரு குறிப்பிட்ட இனத்தைப் பாதுகாத்து, நிலையான முறையில் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு நேரடியாக வெகுமதி அளிக்கிறது.

இன்றுவரை, தேசிய பல்லுயிர் ஆணையம் ஆந்திர மாநிலத்திற்கு செம்மரப் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் பலன் பெறுபவர்களுக்காக ரூ. 104 கோடிக்கு மேல்  நிதியை விடுவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு ரூ.15 கோடிக்கு மேல் நிதியை வழங்கியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில்,  ஆந்திரா,  தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த 220-க்கும் மேற்பட்ட செம்மர விவசாயிகளுக்கு ரூ 5.35 கோடி  நிதியை தேசிய பல்லுயிர் ஆணையம் விடுவித்துள்ளது.

 தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், நிதியை பயனாளிகளுக்குத் திரும்ப வழங்குவது பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி,  விவசாயிகள் மற்றும் சமூகங்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. தேசிய பல்லுயிர் ஆணையம்  எதிர்கால சந்ததியினருக்காக செம்மரத்தைப் பாதுகாக்க பாடுபடுகிறது, இது வாழ்வாதாரங்களுக்கும் உலகளாவிய பல்லுயிர் முயற்சிகளில் இந்தியாவின் தலைமைத்துவத்திற்கும் பயன்படுகிறது.

Leave a Reply