இந்தியாவின் பழங்கால கப்பல் கட்டுதல் முறைகளையும் கடல்சார் பாரம்பரியத்தையும் மீட்டெடுக்கும் வகையில், பாரம்பரிய பாய்மரக் கப்பல் ஐஎன்எஸ்வி கௌண்டின்யா வடிவமைக்கப்பட்டு கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் 2025 டிசம்பர் 29 அன்று தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்கவுள்ளது. இது குஜராத்தின் போர்பந்தரிலிருந்து 29-ம் தேதி ஓமானின் மஸ்கட்டுக்குப் புறப்படுகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவை, பரந்த இந்தியப் பெருங்கடல் மூலம் உலகத்துடன் இணைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடல்வழிப் பாதைகளில், இந்தக் கப்பல் பயணிக்கும். பழங்கால இந்திய கப்பல்களின் வடிவமைப்புகளின்படி, பாரம்பரிய முறையில் மரப் பலகை நுட்பங்களைப் பயன்படுத்தி ஐஎன்எஸ்வி கௌண்டின்யா கப்பல் முழுமையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
பழங்கால வரலாறு, கைவினைத்திறன், நவீன கடற்படையின் நிபுணத்துவம் ஆகியவற்றின் அரிய ஒருங்கிணைப்பாக இது திகழ்கிறது. தற்காலக் கப்பல்களைப் போலல்லாமல், அதன் மரப் பலகைகள் தேங்காய் நார் கயிற்றைப் பயன்படுத்தி ஒன்றாக சேர்க்கப்பட்டு இயற்கை பசைகளால் வலுவாக இணைக்கப்பட்டுள்ளன. இது பழங்காலத்தில் பரவலாக இருந்த கப்பல் கட்டும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நீண்ட காலத்திற்கு முன்பே இந்தியர்கள் மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள முடிந்தது.
பழங்காலத்தில் இந்தியாவிலிருந்து தென்கிழக்கு ஆசிய பகுதிகளுக்கு கப்பல் மூலம் பயணம் செய்ததாக கூறப்படும் புகழ்பெற்ற மாலுமி கௌண்டின்யாவின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கப்பல், இந்தியாவின் கடல்சார் வரலாற்றுச் சிறப்பை எடுத்துரைக்கிறது.
எம்.பிரபாகரன்
