ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இந்தியாவின் குறுகிய கால செயல்பாட்டு திறனை நிரூபித்தது! – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஆயுதப்படையினர் மூலம் இந்தியாவின் வலிமையான மற்றும் குறுகியகால செயல்திறன் நிரூபிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று (டிசமபர் 18, 2025) நடைபெற்ற விமானப்படை தளபதிகள் மாநாட்டில் அவர் உரையாற்றினார். இந்திய விமானப்படை மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், சுறுசுறுப்புமிக்க செயல்திறனுடன், உத்தி சார்ந்த நம்பிக்கையுடன், எதிர்காலத்தைச் சார்ந்த படையாக நாட்டின் நலன்களை பாதுகாக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது துணிச்சலுடன், விரைவாகவும், துல்லியமாகவும் பயங்கரவாதிகளின் முகாம்களை தகர்த்த இந்திய விமானப்படையை பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார். தாக்குதலுக்கு பிந்தைய பாகிஸ்தானின் பொறுப்பற்ற எதிர்வினையை திறனுடன் கையாண்டதாகவும் அவர் கூறினார். ஆயுதப்படையினர் மீது, குறிப்பாக, விமானப்படையின் திறன் குறித்த மக்களின் நம்பிக்கையை எடுத்துரைத்த அவர், வழக்கமாக எதிரிகள் தாக்குதல் நடத்தும் போது, மக்கள் மறைவிடத்திற்கு செல்லும் நிலையில், இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்த முயன்ற போது, இந்திய மக்கள் அமைதியாக தங்களது அன்றாட பணிகளை தொடர்ந்து மேற்கொண்டதாக தெரிவித்தார். இது ஒவ்வொரு இந்தியரும் நமது செயல்பாட்டு திறன் மீது வைத்துள்ள நம்பிக்கையின் ஆதாரம் என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

Leave a Reply