தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கு உதவிடும் வகையில் ரிலையன்ஸ் ஜியோவுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தம்.

தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும் தடையற்ற போக்குவரத்து அனுபவத்தை ஏற்படுத்தவும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் தொலைத்தொடர்பு அடிப்படையிலான பாதுகாப்பு எச்சரிக்கை முறையை அறிமுகப்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜியோவின் 4ஜி  மற்றும் 5ஜி சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் தங்களது மொபைல் போன்களில் முன்கூட்டியே எச்சரிக்கை தகவல்களை பெறமுடியும்.  விபத்து பகுதிகள், விலங்குகள் நடமாடும் பகுதிகள், பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள்  மற்றும் அவசர கால மாற்றுப்பாதை குறித்த தகவல்களை இதன் மூலம்  அறிந்து கொள்ள முடியும்.

இத்தகவல்களை உரிய நேரத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில்  பயணிப்போருக்கு அளிப்பதன் மூலம் அவர்கள் அதற்கேற்றால் போல் தங்களது வாகனங்களை இயக்க வகை செய்யப்படுகிறது. இந்த எச்சரிக்கை தகவல்களை குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், ஆகியவற்றின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply