குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, புதுதில்லியில் இந்திய ராணுவத்தின் மூன்றாவது பதிப்பின் ‘சாணக்ய பாதுகாப்பு உரையாடல்-2025’ தொடக்க அமர்வில் கலந்து கொண்டார்.
இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் இந்திய ஆயுதப்படைகள் தொழில்முறை மற்றும் தேசபக்தியை வெளிப்படுத்தியுள்ளன என்று குடியரசுத்தலைவர் கூறினார். வழக்கமான, கிளர்ச்சி எதிர்ப்பு என ஒவ்வொரு பாதுகாப்பு சவாலின் போதும், நமது படைகள் குறிப்பிடத்தக்க தகவமைப்பு மற்றும் உறுதியை வெளிப்படுத்தியுள்ளன. சமீபத்திய ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி நமது பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தடுப்பு உத்தியில் ஒரு வரையறுக்கும் தருணமாக நிற்கிறது என்று அவர் கூறினார்.
வசுதைவ குடும்பகம் என்ற நமது நாகரிக நெறிமுறைகளால் வழிநடத்தப்பட்டு, உலகளாவிய பொறுப்புடன் இணைந்து வாழ முடியும் என்பதைக் காட்டியுள்ளோம் என்று அவர் கூறினார். நமது ராஜதந்திரம், பொருளாதாரம் மற்றும் ஆயுதப்படைகள் இணைந்து அமைதியை விரும்பும் இந்தியாவை முன்னிறுத்துகின்றன. ஆனால் அதன் எல்லைகளையும் அதன் குடிமக்களையும் வலிமை மற்றும் உறுதியுடன் பாதுகாக்கத் தயாராக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
ராணுவம் இளைஞர்களிலும் மனித மூலதனத்திலும் முதலீடு செய்து வருவதாக குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். கல்வி, என்சிசி விரிவாக்கம் மற்றும் விளையாட்டு மூலம் இளைஞர்களிடம் தேசபக்தியை விதைக்கிறது. இளம் பெண் அதிகாரிகள் மற்றும் வீரர்களின் பங்களிப்பு, உள்ளடக்கிய உணர்வை ஊக்குவிக்கும் என்று அவர் விளக்கினார். மேலும், இது இந்திய ராணுவத்தில் சேர இளம் பெண்களை ஊக்குவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
சாணக்ய பாதுகாப்பு உரையாடல்-2025-ன் விவாதம் மற்றும் முடிவுகள், நமது தேசியக் கொள்கையின் எதிர்கால வரையறைகளை வடிவமைப்பதற்கான கொள்கை வகுப்பாளர்களுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கும் என்று குடியரசுத்தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.
திவாஹர்
