ஐதராபாதில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கைரூட் இன்ஃபினிட்டி வளாகத்தை பிரதமர் நரேந்திர மோதி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

PM addressing at the inauguration of the Skyroot’s Infinity Campus in Hyderabad, Telangana via video conferencing on November 27, 2025.

தெலங்கானா மாநிலம் ஐதராபாதில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கைரூட் இன்ஃபினிட்டி வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று (27.11.2025) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், விண்வெளித்துறையில் நாடு இன்று முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பைக் காண்கிறது  என்றும், தனியார் துறை பங்கேற்பின் மூலம் இந்தியாவின் விண்வெளிச் சூழல் அமைப்பு மாபெரும் பாய்ச்சல் வேகத்தைக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.

ஸ்கைரூட் இன்ஃபினிட்டி வளாகம் என்பது இந்தியாவின் புதிய சிந்தனை, புத்தாக்கம், இளையோர் சக்தி ஆகியவற்றை பிரதிபலிக்கிறது என்று கூறிய அவர், புத்தாக்கத்திலும் கடின உழைப்புத் திறனிலும் தொழில் முனைவிலும் நாட்டின் இளைஞர்கள் புதிய உச்சங்களைத் தொட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.  இந்த வளாகத்தை உருவாக்கியுள்ள திரு பவன்குமார் சந்தனா, திரு நாகபரத் தாக்கா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இந்த இரண்டு தொழில்முனைவோரும் நாடு முழுவதும் உள்ள ஏராளமான இளம் விண்வெளித் தொழில்முனைவோருக்கு ஊக்கம் அளித்துள்ளனர் என்றார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ பல பத்தாண்டுகளாக  இந்தியாவின் விண்வெளிப் பயணத்திற்கு புதிய பரிமாணங்களை வழங்கியுள்ளது என்றும் இந்தத் துறையில் நம்பகத்தன்மை, திறன் மற்றும் மதிப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது  என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மாறி வரும் காலச்சூழலில்  விண்வெளித் துறையின் விரிவாக்கம் என்பது, தகவல்தொடர்பு, வேளாண்மை, கடற்பகுதி கண்காணிப்பு, நகர்ப்புறத் திட்டமிடல், வானிலை முன்னறிவிப்பு, தேசப்பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அடித்தளமாகியுள்ளது என்று திரு மோடி கூறினார்.  இதன் காரணமாகவே விண்வெளித்துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்கள்  செய்யப்படுகின்றன என்றும் தனியார் துறை  கண்டுபிடிப்புக்கு அரசு கதவைத் திறந்திருப்பதாகவும் புதிய விண்வெளிக் கொள்கையைத் தயாரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய இளைஞர்கள் அனைத்துக்கும் மேலானதாக எப்போதும் தேச நலனை கருத்தில் கொள்வதாகவும் ஒவ்வொரு வாய்ப்பையும் சிறப்பாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்த திரு மோடி, விண்வெளித்துறையில் அரசு தனியாருக்கு திறந்தபோது, நாட்டின் இளைஞர்கள் குறிப்பாக ஜென்-சி தலைமுறையினர் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முன்வந்துள்ளனர் என்றார். தற்போது 300-க்கும் அதிகமான விண்வெளி சார்ந்த புத்தொழில் நிறுவனங்கள் செயல்படுவது இந்தியாவின் விண்வெளித்துறைக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஜென்-சி பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள், விஞ்ஞானிகள், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகிறார்கள் என்றும் சில ஆண்டுகளுக்கு முன் கற்பனை செய்தும் பார்த்திராத துறைகளில் இவர்கள் பணியாற்றுகிறார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்தியாவில் தனியார்  விண்வெளித் திறமை உலகம் முழுவதும் அடையாளம் பெற்றுள்ளது என்று கூறிய திரு நரேந்திர மோடி, உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்திய விண்வெளித்துறையில், முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர் என்றார். இந்தியாவின் ஜென்-சி தலைமுறையினரின் படைப்பாக்கம், ஆக்கப்பூர்வ மனநிலை, திறன் கட்டமைப்பு ஆகியவை உலக ஜென்-சி தலைமுறையினருக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்.    

இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் திரு ஜி  கிஷன் ரெட்டி மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply