ஆதார் தரவுத்தளத்தின் தொடர்ச்சியான துல்லியத் தன்மையைப் பராமரிக்க நாடு தழுவிய தூய்மைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இறந்துபோன 2 கோடிக்கும் அதிகமானோரின் ஆதார் எண்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் செயலிழக்கச் செய்துள்ளது.
இந்தியத் தலைமைப் பதிவாளர், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், பொது விநியோக அமைப்பு, தேசிய சமூக உதவித் திட்டம் போன்றவற்றிலிருந்து இறந்தவர்களின் தரவை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பெற்றுள்ளது. இறந்தவர்களின் தரவைப் பெறுவதற்கு நிதி நிறுவனங்கள் மற்றும் இதுபோன்ற பிற நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதையும் இது எதிர்நோக்குகிறது.
செயலிழந்த எந்தவொரு ஆதார் எண்ணும் மற்றொரு நபருக்கு மீண்டும் ஒதுக்கப்பட மாட்டாது. இருப்பினும், ஒரு நபர் இறந்தால், அடையாள மோசடி செய்ய அல்லது நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக இத்தகைய ஆதார் எண்ணை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதைத் தடுக்க ஆதார் எண் செயலிழக்கச் செய்யப்படுவது அவசியமாகிறது.
திவாஹர்
