உத்தராகண்ட் சட்டப்பேரவையில் குடியரசுத்தலைவர் உரையாற்றினார்.

உத்தராகண்ட் மாநிலம் உருவானதன் வெள்ளி விழாவை முன்னிட்டு, இன்று (நவம்பர் 3, 2025)  டேராடூனில் உள்ள உத்தராகண்ட் சட்டப்பேரவையில்  குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு உரையாற்றினார்.

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நமது நாடாளுமன்ற அமைப்பின் முக்கியத் தூண் சட்டமன்றங்கள் என்று கூறினார். அரசியலமைப்பு சட்டத்தை  உருவாக்கியவர்கள் நாடாளுமன்ற முறையை ஏற்றுக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான பொறுப்புடைமைக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததாக பாபாசாகேப் அம்பேத்கர் கூறினார். பொதுமக்களுக்கு தொடர்ந்து பொறுப்புடைமை என்பது நாடாளுமன்ற அமைப்பின் பலம் மற்றும் சவால் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான மிக முக்கியமான இணைப்பு என்று குடியரசுத்தலைவர் கூறினார். தொகுதி மக்களுடன் தொடர்பு கொள்ளவும்,அடித்தட்டு அளவில் அவர்களுக்கு சேவை செய்யவும் வாய்ப்பு கிடைப்பது ஒரு பெரிய பாக்கியம். சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டு அவர்களின் நலனுக்காகப் பாடுபட்டால், பொதுமக்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான நம்பிக்கையின் பிணைப்பு வலுவாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

உத்தராகண்ட் சட்டமன்ற உறுப்பினர்கள் வளர்ச்சி மற்றும் பொது நலப் பணிகளை முழு அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்று  வலியுறுத்திய குடியரசுத்தலைவர்,  இதுபோன்ற பணிகள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்று கூறினார். சமூகத்தின் பின்தங்கிய பிரிவுகளின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக சிறப்பு உணர்திறனுடன் பணியாற்றுமாறு அவர்  அறிவுறுத்தினார். இளைய தலைமுறையினருக்கு வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குவதும் அவர்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அரசியலமைப்பு சட்டத்தின்  44-வது பிரிவின் கீழ், நமது அரசியல் சாசனத்தை  உருவாக்கியவர்கள் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்ததாக அவர் கூறினார். அரசியலமைப்பு உத்தரவுப்படி ஒரே மாதிரியான சிவில் சட்ட மசோதாவை செயல்படுத்தியதற்காக உத்தராகண்ட் சட்டமன்ற உறுப்பினர்களை அவர் பாராட்டினார். உத்தரகண்ட் லோக்ஆயுக்தா மசோதா, உத்தராகண்ட் ஜமீன்தாரி ஒழிப்பு மற்றும் நில சீர்திருத்த மசோதா மற்றும் நகலெடுப்பு எதிர்ப்பு மசோதா உட்பட 550க்கும் மேற்பட்ட மசோதாக்கள் உத்தராகண்ட் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட்டு அவர் மகிழ்ச்சியடைந்தார். வெளிப்படைத்தன்மை, ஒழுக்கம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட இத்தகைய மசோதாக்களை நிறைவேற்றியதற்காக சட்டமன்ற உறுப்பினர்களை அவர் பாராட்டினார்.

உத்தராகண்ட் ஒப்பிடமுடியாத இயற்கை செல்வம் மற்றும் அழகால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்று குடியரசுத்தலைவர் கூறினார். இயற்கையின் இந்தப் பரிசுகளைப் பாதுகாத்து மாநிலம் வளர்ச்சிப் பாதையில் முன்னேற வேண்டும். கடந்த 25 ஆண்டுகளில், உத்தராகண்ட் மக்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மைல்கற்களை அடைந்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்டு அவர் மகிழ்ச்சியடைந்தார். சுற்றுச்சூழல், எரிசக்தி, சுற்றுலா, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் மாநிலம் பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. டிஜிட்டல்  இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரிவான வளர்ச்சி முயற்சிகளின் விளைவாக, மனித மேம்பாட்டு குறியீடுகளின் பல அளவுருக்களில் உத்தராகண்ட் முன்னேற்றம் அடைந்துள்ளது. ‘தேசமே முதன்மை’ என்ற உணர்வோடு,  சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலத்தையும் நாட்டையும் விரைவான வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னோக்கி அழைத்துச் செல்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

Leave a Reply