இந்தியக் கடற்படை பணியாளர்களின் தலைமை தளபதியாக வைஸ் அட்மிரல் குர்சரன் சிங், இன்று (01 நவம்பர் 2025) பொறுப்பெற்றுக் கொண்டார்.
தேசிய பாதுகாப்பு அகாடமியின் (கடக்வாஸ்லா) முன்னாள் மாணவரான இவர், இந்தியக் கடற்படையில் ஜூலை 01, 1990 அன்று பணியில் சேர்ந்தார்.
கொடி அதிகாரியான இவர், கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ளார். பீரங்கி மற்றும் ஏவுகணை போன்ற சிறப்பு ஆயுதங்களைக் கையாள்வதில் நிபுணத்துவம் கொண்டவராகவும், இந்தியக் கடற்படைக் கப்பல்களான ரஞ்சித் மற்றும் பிரஹாரில் பணியாற்றிய அனுபவம் கொண்டவராகவும் உள்ளார். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மூன்று போர்க்கப்பல்களின் தலைமைக் குழுவில் ஒரு அங்கமாக இருந்த பெருமையும் அவருக்கு உண்டு. அதாவது, ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா போர்க்கப்பலின் பீரங்கி அதிகாரியாகவும், ஐஎன்எஸ் சிவாலிக் போர்க்கப்பலின் நிர்வாக அதிகாரியாகவும், ஐஎன்எஸ் கொச்சி போர்க்கப்பலில் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். ஐஎன்எஸ் வித்யுத் & ஐஎன்எஸ் குக்ரிக் போன்ற கப்பல்களிலும் அவர் முக்கிய அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
ஐஎன்எஸ் துரோணாச்சார்யா கப்பலில் (பீரங்கித் தொழில்நுட்பப் பள்ளி) பயிற்சியாளராகவும், கோவாவின் கடற்படைப் போர் கல்லூரியின் துணைத் தளபதியாகவும் பதவி வகித்துள்ளார். அவர் பணியாற்றிய காலத்தில் உதவித் தலைமைப் பணியாளர் (மனிதவள மேம்பாட்டுத் துறை) மற்றும் தேசிய தலைமையகத்தில், கடற்படை புலனாய்வு இயக்குநரகம் மற்றும் இந்திய கடற்படை பணிக்குழுவிலும் பணியாற்றியுள்ளார்.
அவர் கடற்படையின் கிழக்கு கட்டளைப் பிரிவின் கொடி அதிகாரியாக நவம்பர் 2022-ல் பொறுப்பு வகித்தார். இந்தக் காலக்கட்டத்தில், கடற்படை ‘இலக்கை நோக்கிய ஆயுதங்கள்’ என்ற பணியில் கவனம் செலுத்தி, செயல்பாட்டுத் தயார்நிலையின் விரைவான செயல்பாடுகளை பராமரிப்பதையும் உறுதி செய்தார். ஜனவரி 2024-ல் வைஸ் அட்மிரல் பதவி உயர்வு பெற்று கட்டுப்பாட்டு பணியாளர் சேவைகளுக்கான கொடி அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். அங்கு பணியாளர்கள் மற்றும் கடற்படை வீரர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்த, அவரது தலைமையின் கீழ், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எம்.பிரபாகரன்
