ஐக்கிய அரபு அமீரக ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் யூசுஃப் மாயூஃப் சையித் அல் ஹலாமி தலைமையிலான படை இந்தியா வந்தடைந்தது.

ஐக்கிய அரபு அமீரக ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் யூசுஃப் மாயூஃப் சையித் அல் ஹலாமி தலைமையிலான படை இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளது. இந்தியா ஐக்கிய அரபு அமீரகம் இடையே இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் திறன் மேம்பாடு பயிற்சி ஆகிய துறைகளில் புதிய வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையிலும் உயர் அதிகாரிகள் நிலையிலான படைப்பிரிவு இந்தியா வந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் நீண்ட கால உறவுகளை வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு அமீரக ராணுவத்தின் வருகை அமைந்துள்ளது.

ராணுவ மேஜர் ஜெனரல் யூசுஃப் மாயூஃப் சையித் அல் ஹலாமி தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக ராணுவப் படைப்பிரிவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும் இந்தப் பயணத்தின் போது அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்தியாவின் பாதுகாப்புத் திறன் குறித்தும், இந்திய ராணுவத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திறன் குறித்தும் ராணுவ வடிவமைப்பு வாரியம் மற்றும் தகவல் அமைப்பின் தலைமை இயக்குநர் விரிவாக எடுத்துரைத்தார்.

தேசிய போர் நினைவிடத்திற்கு நாளை (28.10.2025) செல்லும் ஐக்கிய அரபு அமீரக ராணுவத்தின் மேஜர் ஜெனரல், அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு அவருக்கு பல்வேறு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும்  தளவாடங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட உள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சமீர் காமத்துடன் மேஜர் ஜெனரல் யூசுஃப் மாயூஃப் சையித் அல் ஹலாமி கலந்துரையாடுகிறார்.

Leave a Reply