பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் ஜிஎஸ்டி வரி முறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் ஒவ்வொரு துறையிலும் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும். இந்தப் புதிய வரி சீர்திருத்த நடவடிக்கைகள் மீன்வளத்துறையின் வளர்ச்சிக்கு வித்திடும். மீன்வளத்துறையில் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு மீன்பிடி தொழிலுக்கான செலவுகளைக் குறைப்பதுடனும் உள்நாட்டில் போட்டிகளை அதிகரிக்கச் செய்வதுடனும் ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்புகளை மேம்படுத்தும். இதன் மூலம் லட்சக்கணக்கான மீனவர்கள் நேரிடையாக பயனடைவர். மேலும் நாட்டின் மீன்பிடி தொழில் மற்றும் மீன்வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவிடும்.
மாற்றியமைக்கப்பட்ட வரி விகிதத்தின்படி மீன் எண்ணெய், மீன்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட மீன், என அனைத்து வகையான மீன் சார்ந்த பொருட்களுக்கு வரி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மதிப்புக்கூட்டப்பட்ட கடல்சார் உணவுப் பொருட்கள் குறைந்த விலையில், உள்ளூர் நுகர்வோர்களுக்கு கிடைப்பதுடன் கடல் சார் உணவுப் பொருள் ஏற்றுமதியில், போட்டித் தன்மையை அதிகரிக்கச் செய்யும். டீசல் எஞ்சின், நீர் இறைப்பான்கள், சொட்டு நீர் பாசனத்திற்கான கருவிகள், மீன்வளத்துக்குத் தேவைப்படும் உபகரணங்கள என அனைத்து வகையான பொருட்களுக்கும் ஏற்கனவே இருந்த 12 மற்றும் 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் வரி குறைக்கப்பட்டுள்ளது. இது மீனவர்களின் உற்பத்திக்கான செலவுகளை வெகுவாகக் குறைக்க உதவிடும். முக்கியத்துவம் வாய்ந்த ரசாயனங்களான அமோனியா மற்றும் நுண்ணூட்டச் சத்து பொருட்கள் மற்றும் நீரின் தரநிலை மேலாண்மைக்கான பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.
இது போன்ற வரி சீர்திருத்த நடவடிக்கைகள் மீனவர்கள், மீனவளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், சிறு அளவிலான மீனவர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், கூட்டுறவுச் சங்கங்கள் என அனைவருக்கும் நிதிச்சுமையைக் குறைத்து நேரடிப் பயன்களை அளிப்பதுடன், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திருத்தியமைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் இம்மாதம் 22-ம் தேதி அமலுக்கு வருகிறது.
எஸ்.சதிஸ் சர்மா
