உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மருத்துவக் கல்லூரியில் நோயாளி ஒருவர் உயிரிழந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மருத்துவக் கல்லூரியில் முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் 2025 ஆகஸ்ட் 09 அன்று,  25 வயதான நோயாளி ஒருவர் உயிரிழந்ததையடுத்து, மருத்துவமனை மற்றும் காவல்துறையின் அனுமானிக்கப்பட்ட தவறான மேலாண்மையே இதற்கு காரணம், என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்கிறது.

அந்த நோயாளியை இரண்டு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியதாகவும், அப்போது அவர் மயக்க நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பணியில் இருந்த மருத்துவர் அவரை வேறு மருத்துவமனைக்கு பரிந்துரைத்த நிலையில், அவருடன் எவரும் இல்லாததால், உடன் செல்ல ஒரு காவலரை அனுப்புமாறு உள்ளூர் காவல் நிலையத்திற்கு செய்தி அனுப்பப்பட்டது. சுமார் 6-7 மணி நேரம் வரை காவல் நிலையத்திலிருந்து எவரும் மருத்துவமனைக்கு வரவில்லை. இந்த தருணத்தில் நோயாளி உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையெனில் அது மனித உரிமைகளை மீறுவதாக ஆணையம் கருதுகிறது, இதையடுத்து இது குறித்த விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave a Reply