சிறிய வகையிலான செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தை (எஸ்எஸ்எல்வி) செலுத்துவதற்காக குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்படவுள்ள ஏவுதள திட்டத்திற்கு 2025 ஜூலை 31 நிலவரப்படி ரூ.381.58 கோடி செலவிடப்பட்டிருப்பதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் பதிலளித்த அவர், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு கிழக்கு கடற்கரை சாலையில் மாற்றுப்பாதை அமைப்பதற்கான நிலம் தவிர, மற்ற பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். இந்தத் தளத்தின் தொழில்நுட்ப வசதிகளுக்கான கட்டமைப்பு பணிகள் தொடங்கியிருப்பதாக அவர் கூறினார்.
நிதியாண்டு 2026-27-ல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.985.96 கோடி என்றும், இதில் ரூ.389.58 கோடி செலவிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இஸ்ரோவின் சிறிய வகையிலான செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தையும் (எஸ்எஸ்எல்வி) தனியார் நிறுவனங்களின் செலுத்து வாகனங்களையும் இந்த ஏவுதளத்திலிருந்து செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்
