தமிழ்நாட்டுக்கு ஜூலை 26-27 தேதிகளில் பிரதமர் நரேந்திர மோதி வருகை.

இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுகளுக்கான பயணத்திலிருந்து திரும்பியவுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 26 ஆம் தேதி இரவு 8 மணியளவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், ரூ 4800 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்த திட்டங்களை  நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

ஜூலை 27 ஆம் தேதி, பிரதமர் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் கோயிலில் மதியம் 12 மணியளவில் ஆடித் திருவாதிரை விழாவுடன் சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் பங்கேற்பார்.

தூத்துக்குடியில் பிரதமர்

மாலத்தீவுகளில் அரசு முறைப் பயணத்தை முடித்த பிறகு, பிரதமர் நேரடியாக தூத்துக்குடிக்குச் சென்று, பிராந்திய இணைப்பைக் கணிசமாக மேம்படுத்துதல், தளவாடத் திறனை அதிகரித்தல், தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் தமிழ்நாடு முழுவதும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் போன்ற பல துறைகளில் பல்வேறு முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

உலகத் தரம் வாய்ந்த விமான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் இணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, தென் பிராந்தியத்தின் அதிகரித்து வரும் விமானத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுமார் ரூ 450 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உருவாக்கப்பட்ட புதிய முனையக் கட்டிடத்தை பிரதமர் திறந்து வைப்பார். தூத்துக்குடி விமான நிலையத்தில் உள்ள புதிய முனையக் கட்டிடத்தின் உள்ளே நடந்து சென்று பிரதமர் பார்வையிடுவார்.

17,340 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த முனையம், நெரிசல் மிக்க உச்சபட்ச நேரங்களில் 1,350 பயணிகளையும், ஆண்டுதோறும் 20 லட்சம் பயணிகளையும் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில்  உச்ச நேரத்தில் 1800 பயணிகளையும், ஆண்டிற்கு  25 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். 100% எல்இடி விளக்குகள், ஆற்றல் திறன் கொண்ட மின் மற்றும் மேலாண்மை அமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் மறுபயன்பாடு ஆகியவற்றுடன், இந்த முனையம் GRIHA-4 நிலைத்தன்மை மதிப்பீட்டை அடைவதற்காக கட்டப்பட்டுள்ளது. இந்த நவீன உள்கட்டமைப்பு பிராந்திய விமான இணைப்பை கணிசமாக மேம்படுத்தும் மற்றும் தென் தமிழ்நாட்டில் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாலை உள்கட்டமைப்பு துறையில், பிரதமர் இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிப்பார். முதலாவது, விக்கிரவாண்டி-தஞ்சாவூர் வழித்தடத்தின் கீழ் ரூ 2,350 கோடிக்கும் அதிகச் செலவில் உருவாக்கப்பட்ட என்எச்-36 -ன் 50 கி.மீ சேத்தியாத்தோப்பு-சோழபுரம் பாதையின் 4-வழிப்பாதை ஆகும். இதில் மூன்று புறவழிச்சாலைகள், கொள்ளிடம் ஆற்றின் மீது 1 கி.மீ நான்கு வழிப்பாதை பாலம், நான்கு பெரிய பாலங்கள், ஏழு மேம்பாலங்கள் மற்றும் பல சுரங்கப்பாதைகள் ஆகியவை அடங்கும். இது சேத்தியாத்தோப்பு-சோழபுரம் இடையே பயண நேரத்தை 45 நிமிடங்கள் குறைக்கும்.  டெல்டா பிராந்தியத்தின் கலாச்சார மற்றும் விவசாய மையங்களுக்கான இணைப்பை அதிகரிக்கும். இரண்டாவது திட்டம், 5.16 கி.மீ என்எச்-138 தூத்துக்குடி துறைமுக சாலையின் 6 வழிப்பாதை ஆகும், இது சுமார் ரூ 200 கோடியில் கட்டப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகள் மற்றும் பாலங்கள் இடம்பெறும், இது சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும், தளவாடச் செலவுகளைக் குறைக்கும்.  வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தைச் சுற்றியுள்ள துறைமுகம் சார்ந்த தொழில்துறை வளர்ச்சியை ஆதரிக்கும்.

துறைமுக உள்கட்டமைப்பு மற்றும் சுத்தமான எரிசக்தி முயற்சிகளை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய ஊக்கமாக,  சிதம்பரனார் துறைமுகத்தில் சுமார் ரூ 285 கோடி மதிப்புள்ள, ஆண்டுக்கு 6.96 மில்லியன் மெட்ரிக் டன்  சரக்குகளை கையாளும் திறன் கொண்ட வடக்கு சரக்கு தளவாட நிலையம்–III ஐ பிரதமர் திறந்து வைப்பார். இது பிராந்தியத்தில் மொத்த உலர் சரக்கு தேவைகளைக் கையாளுவதற்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும், இதன் மூலம் ஒட்டுமொத்த துறைமுகச் செயல்திறனை மேம்படுத்துவதோடு சரக்கு கையாளும் தளவாடங்களை மேம்படுத்தும்.

நிலையான மற்றும் திறமையான இணைப்பை அதிகரிக்க தென் தமிழ்நாட்டில் மூன்று முக்கிய ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் அர்ப்பணிப்பார். 90 கி.மீ மதுரை-போடிநாயக்கனூர் பாதையின் மின்மயமாக்கல் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்கும். மதுரை மற்றும் தேனியில் சுற்றுலா மற்றும் பயணத்தை ஊக்குவிக்கும். திருவனந்தபுரம்-கன்னியாகுமரி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 21 கி.மீ. நாகர்கோவில் டவுன்-கன்னியாகுமரி பிரிவின் ரூ 650 கோடி இரட்டைப்பாதை, தமிழ்நாட்டுக்கும் கேரளாவிற்கும் இடையிலான இணைப்புகளை வலுப்படுத்தும். கூடுதலாக, ஆரல்வாய்மொழி-நாகர்கோவில் சந்திப்பு (12.87 கி.மீ) மற்றும் திருநெல்வேலி-மேலப்பாளையம் (3.6 கி.மீ) பிரிவுகளின் இரட்டை ரயில் பாதை, சென்னை-கன்னியாகுமரி போன்ற முக்கிய தெற்கு வழித்தடங்களில் பயண நேரத்தைக் குறைக்கும். மேலும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்துவதன் மூலம் பிராந்தியப் பொருளாதார ஒருங்கிணைப்பையும்  அதிகரிக்கும்.

Leave a Reply