சிவகாசி அருகில் உள்ள சின்னகாமன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுப்பட்டு வருகிறார்கள். உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்ற போதும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இத்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
கடந்த பல வருடங்களாக தொடர்ந்து பட்டாசு ஆலைகளின் வெடிவிபத்து தொடர்ந்து ஏற்படுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அதில் இறப்பவர்கள் சாதாரண ஏழை, எளிய தொழிலாளர்கள். தமிழக அரசு பட்டாசு ஆலைகளை முறைப்படுத்தி அவற்றை ஆய்வு செய்து உரிய பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதோடு விபத்தில் தீக்காயம் அடைந்தவர்களுக்கு உயர்சிகிச்சையும் நிவாரணமும் அளிக்க வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாதவாறு அரசு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் பூரண குணம் அடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
