நாட்டின் டிஜிட்டல் நடவடிக்கைகள் முன்னேற்றம் கண்டு வருவதையடுத்து மத்திய நிலக்கரி அமைச்சகம், சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் மூலம் ஒற்றைச் சாளர அனுமதி அளிப்பதற்கான இணையதள தொகுதியை அறிமுகப்படுத்த உள்ளது. இது இம்மாதம் 4-ம் தேதி மத்திய நிலக்கரி அமைச்சரால் தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இணையதள தொகுதி நிலக்கரி ஆய்வு மதிப்பு சங்கிலியின் முழுமையான டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக உள்ளது. துரப்பண ஆய்வுப் பணிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் தங்களது ஆய்வுத் திட்டங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க இந்தப் புதிய தளம் வகை செய்கிறது. பின்னர் அவை ஒருங்கிணைந்த அமைப்பு மூலம் அமைச்சகத்தால் தொகுக்கப்பட்டு அவற்றின் செயல்பாடுகளுக்கான அங்கீகாரம் வழங்கப்படும்.
நிலக்கரி ஆய்வுக்கான முழு செயல்முறையையும் இந்தத் தொகுதி உள்ளடக்கியுள்ளது. ஆய்வுத் திட்டத்தின் சரிபார்ப்பு, அவ்வப்போது மேற்கொள்ளப்படும் முன்னேற்றப் பணிகள் தொடர்பான விவரங்களை சமர்ப்பித்தல், புவியியல் அறிக்கைகள் மற்றும் ஒப்புதல் நடவடிக்கைகள், மதிப்பீடு செய்தல், பதிவேற்ற நடைமுறைகள் மற்றும் இறுதி ஒப்புதல் ஆகியவற்றின் அனைத்து தகவல் தொடர்புகளையும் ஒரே டிஜிட்டல் தளத்தில் வழங்க இது உதவிடும். இது ஒவ்வொரு செயல் திட்டத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவைப் பராமரிக்கும் அதே வேளையில், ஆய்வு தொடர்பான தரவுகள், அனுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்கிறது. நிகழ்நேர கண்காணிப்பு, தானியங்கி டிஜிட்டல் ஆவண மேலாண்மை, ஒருங்கிணைந்த தகவல் பலகை மற்றும் ஆய்வு தொடர்பான முன்மொழிவுகளைச் செயலாக்குவதற்குத் தேவையான காலஅவகாசத்தை வெகுவாகக் குறைக்கவும் உதவுகிறது.
திவாஹர்
