நாட்டுமக்களே! வணக்கம். மனதின் குரலில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன், நல்வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் யோகக்கலையின் ஆற்றல், சர்வதேச யோகக்கலை தினத்தின் நினைவலைகளால் நிரம்பியிருப்பீர்கள்!! இந்த முறையும் ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நாடெங்கிலும், உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் சர்வதேச யோகக்கலை தினத்தின் அங்கமாக ஆனார்கள். பத்தாண்டுகள் முன்பாக இந்த தினம் தொடங்கப்பட்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இப்போது பத்தாண்டுகளாகத் தொடரும் இந்த நிகழ்ச்சி, ஒவ்வோர் ஆண்டும் முந்தையதை விட மேலும் சிறப்பாக, மேலும் விரிவானதாக வளர்ந்து கொண்டே செல்கிறது. அதிகமானோர் தங்களுடைய அன்றாட வாழ்க்கையிலே யோகக்கலையைத் தங்களுடையதாக்கி வருகின்றார்கள் என்பதையே இது அடையாளப்படுத்துகிறது. இந்த முறை யோகக்கலை தொடர்பான சிந்தையைக் கவரும் பல காட்சிகளைக் காண முடிந்தது. விசாகப்பட்டினத்தின் கடற்கரையில் மூன்று இலட்சம் மக்கள் குழுமி ஒன்றாக யோகம் பயின்றார்கள். விசாகப்பட்டினத்தின் மேலும் ஒரு அற்புதமான காட்சியையும் காண முடிந்தது, 2,000த்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள், 108 நிமிடங்கள் வரை, 108 சூரியநமஸ்காரங்களைச் செய்து காட்டினார்கள். சிந்தித்துப் பாருங்கள், எந்த அளவுக்கு ஒழுங்குமுறை, எத்தனை அர்ப்பணிப்பு இருந்திருக்க வேண்டும் அவர்களுக்கு!! நமது கடற்படையின் கப்பல்களிலும் கூட யோகக்கலையின் பெரிய வெளிப்பாட்டை நம்மால் பார்க்க முடிந்தது. தெலங்கானாவிலே 3,000 மாற்றுத் திறனாளி நண்பர்கள் ஒன்றாக இணைந்து யோகக்கலை முகாமில் பங்கெடுத்துக் கொண்டார்கள். யோகக்கலையானது எவ்வாறு அதிகாரப்பங்களிப்புக்கான ஊடகமாக ஆக முடியும் என்பதை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். தில்லிவாசிகள் யோகக்கலையை தூய்மையான யமுனை என்ற உறுதிப்பாட்டோடு இணைத்து, யமுனை நதியின் கரைகளுக்குச் சென்று யோகப்பயிற்சியை மேற்கொள்வதன் வாயிலாகச் செய்து காட்டினார்கள். உலகிலேயே மிக உயரமான ரயில் பாலமான ஜம்மு கஷ்மீரத்தின் சினாப் பாலத்திலும் கூட மக்கள் யோகப்பயிற்சியை மேற்கொண்டார்கள். இமயத்தின் பனிமூடிய சிகரங்களும், இண்டோ திபேத்திய எல்லையோர ரோந்துப்படையின் வீரர்களும் எனும் போது அங்கும் கூட யோகக்கலையை இவர்கள் பயின்றார்கள், சாகசமும், பயிற்சியும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்தன. குஜராத்வாசிகளும் கூட ஒரு புதிய வரலாற்றினைப் படைத்தார்கள். வட்நகரில் 2121 மக்கள் ஒன்றிணைந்து புஜங்காசனத்தைச் செய்து புதியதொரு பதிவினை ஏற்படுத்தினார்கள். நியூயார்க், லண்டன், டோக்கியோ, பாரீஸ் என உலகின் அனைத்துப் பெருநகரங்களிலிருந்தும் யோகப்பயிற்சி பற்றிய காட்சிகள் கிடைத்தன, ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருந்தன, நிலைத்ததன்மை மற்றும் சமச்சீர்நிலை. இந்த முறைக்கான கருப்பொருளும் கூட மிகவும் சிறப்பானது, ஒரு பூமி, ஒரு ஆரோக்கியத்திற்கு யோகக்கலை. இது வெற்றுக் கோஷமல்ல, வசுதைவ குடும்பகம் அதாவது அனைவரும் ஓர்குலம் என்ற உணர்வினை நமக்குக் குறித்துக் காட்டும் ஒரு திசை இது. இந்த முறை யோகக்கலை தினத்தின் விசாலத்தன்மை, யோகக்கலையை தங்களுடையதாக்கிக் கொள்ள அதிகபட்ச மனிதர்களிடம் உள்ளெழுச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எனக்கு முழுநம்பிக்கை இருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, ஒருவர் புனித யாத்திரையாகப் புறப்படும் போது, ஒரே உணர்வு முதன்மையாக மனதில் எழும் – அது என்னவென்றால், ஒருவழியாக கடவுள் அழைத்துவிட்டார் என்பது தான். இந்த உணர்வுதான் நம்முடைய சமயப் பயணங்களின் ஆன்மாவாக விளங்குகிறது. இந்தப் பயணங்கள் உடலின் ஒழுங்குமுறைக்கும், மனதைச் சுத்தப்படுத்துவதற்கும், பரஸ்பர அன்பு, சகோதரத்துவம், இறைவனோடு ஒன்றிணையவுமான ஊடகமாக இருக்கின்றன. இவை தவிர, இந்த யாத்திரைகளின் ஒரு மிகப்பெரிய கோணம் இருக்கிறது. இந்த சமயப்பயணங்கள், சேவைக்கான சந்தர்ப்பங்களின் மாபெரும் நெறியாகவும் ஆகின்றது. எந்தவொரு பயணம் என்றாலும், எத்தனை நபர்கள் யாத்திரையை மேற்கொள்கிறார்களோ, அதைவிட அதிகமானவர்கள் இந்த தீர்த்தயாத்திரீகர்களுக்கு சேவைபுரியும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். பல இடங்களில் உணவிடங்களும், அன்னதானக் கூடங்களும் அமைக்கப்படுகின்றன. குடிநீர்ப் பந்தல்களை தெருவோரங்களில் மக்கள் அமைக்கிறார்கள். சேவை உணர்வோடு மருத்துவ முகாம்களும், இன்னபிற வசதிகளும் அமைக்கப்படுகின்றன. ஏராளமானவர்கள் தங்கள் பணத்தில் தீர்த்தயாத்திரை மேற்கொள்வோருக்கு தர்ம சத்திரங்களையும், அவர்கள் தங்கி இளைப்பாற அமைப்புகளையும் ஏற்படுத்துகிறார்கள்.
நண்பர்களே, நீண்ட காலத்திற்குப் பிறகு கைலாஷ் மானசரோவர் புனிதப்பயணம் மீண்டும் தொடங்கியிருக்கிறது. கைலாஷ் மானசரோவர் அதாவது, பகவான் சிவனின் புனிதத்தலம். இந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் என அனைத்துப் பாரம்பரியங்களைச் சேர்ந்தோரும் கைலாசத்தை, சிரத்தை மற்றும் பக்திக்கான மையமாகக் கருதுகிறார்கள். நண்பர்களே, ஜூலை மாதம் 3ஆம் தேதியன்று அமர்நாத் புனித யாத்திரை தொடங்க இருக்கிறது, மழைக்காலப் புனிதமான மாதமும் வெகு தொலைவில் இல்லை. சில நாட்கள் முன்பாக நாம் பகவான் ஜகன்நாதரின் ரத யாத்திரையையும் கண்டு பரவசப்பட்டோம். ஓடிஷாவாகட்டும், குஜராத்தாகட்டும், அல்லது தேசத்தின் எந்தவொரு மூலையாகட்டும், இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரையில் பங்கெடுத்துக் கொண்டார்கள். வடக்கிலிருந்து தெற்கு, கிழக்கிலிருந்து மேற்கு என இந்த யாத்திரைகள் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் பிரதிபலிப்புகள். நாம் சிரத்தை உணர்வோடு, முழு அர்ப்பணிப்போடு, ஒழுங்குமுறையைப் பின்பற்றி நமது புனித யாத்திரைகளை நிறைவு செய்யும்போது, அவற்றுக்கான பலன் கண்டிப்பாக நமக்குக் கிடைக்கின்றது. புனிதப்பயணங்களை மேற்கொள்ளும் அனைத்து பாக்கியசாலி பக்தர்களுக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். யாரெல்லாம் சேவையுணர்வோடு இந்தப் பயணங்களை வெற்றிகரமாகவும், பாதுகாப்பானதாகவும் ஆக்குவதில் இணைந்திருக்கிறார்களோ, அவர்களுக்கும் கூட நான் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரியமான நாட்டுமக்களே, நான் இப்போது உங்களோடு தேசத்தின் இரண்டு சாதனைகளைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன், இவை உங்களுக்குள்ளே பெருமிதத்தை ஏற்படுத்தும். இந்தச் சாதனைகளைப் பற்றி உலக அமைப்புகள் விரித்துப் பேசுகின்றன. உலக சுகாதார அமைப்பு- WHOவும், சர்வதேச தொழிலாளர் அமைப்பு- ILOவும், தேசத்தின் இந்தச் சாதனைகளைப் பற்றிக் கொட்டி முழக்கியிருக்கின்றன. முதலாவது சாதனை நமது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. உங்களில் பலர் கண்களோடு தொடர்புடைய நோயைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம், இதன் பெயர் ட்ராகோமா. இந்த நோய் பாக்டீரியாவால் பரவுகிறது. ஒரு காலகட்டத்தில் இந்த நோயானது தேசத்தின் பல பாகங்களில் பரவலாகக் காணப்பட்டது. உரியநேரத்தில் இதை கவனிக்கவில்லை என்றால், மெல்லமெல்ல கண்களின் ஒளி மறைந்து போய்விடும். இந்த ட்ராகோமாவை வேரோடு கிள்ளி எறிய வேண்டும் என்ற உறுதிப்பாட்டை நாம் மேற்கொண்டோம். பாரதத்தை ட்ராகோமாவிலிருந்து விடுதலை அடைந்த நாடாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வது எனக்கு பேருவகையை அளிக்கிறது. இப்போது பாரதம் ட்ராகோமாவிலிருந்து விடுபட்ட தேசமாக ஆகிவிட்டது. சற்றும் சளைக்காமல், ஓய்ந்து போகாமல், தொடர்ந்து இந்த நோயோடு போராடி வெற்றிபெற்ற அனைவருடைய, இலட்சக்கணக்கானவர்களின் கடின உழைப்பிற்குக் கிடைத்த பலன் இது. இந்த வெற்றி நமது சுகாதாரப் பணியாளர்களுக்குக் கிடைத்த வெற்றி. தூய்மை பாரதம் இயக்கமும் கூட இதற்கு முடிவுகட்ட பெரிய அளவில் உதவி புரிந்தது. அனைத்து ஊரகப்பகுதி வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் இயக்கமும் கூட இந்த வெற்றிக்குப் பெரும் பங்களிப்பை நல்கியது. இன்று வீடுகள்தோறும் குழாய்வழி தூய்மையான குடிநீர் கிடைத்துவரும் வேளையில், இப்படிப்பட்ட நோய்களால் அபாயம் குறைந்து வருகிறது. பாரதம் நோய்களை எதிர்கொள்ளும் அதே வேளையில் அவை ஏற்படும் அடிப்படைக் காரணிகளையும் ஒழித்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பும் கூட இந்த விஷயத்தைப் பாராட்டியிருக்கிறது.
திவாஹர்
