கென்யா, மடகாஸ்கர் நாடுகளுக்குப் பாதுகாப்பு இணையமைச்சர் நாளை முதல் 3 நாட்கள் பயணம்.

பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தலைமையிலான இந்தியக் குழு நாளை முதல் (2025 ஜூன் 23) 26-ம் தேதி வரை 3 நாட்கள் கென்யா, மடகாஸ்கர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளது. முதல் கட்டமாக இந்தியா, கென்யா நாடுகளைச் சேர்ந்த வீரமரணம் அடைந்த வீரர்களை கௌரவிக்கும் போர் நினைவுச்சின்னத்தை தைட்டா-டவேட்டா பகுதியில் கூட்டாகத் திறந்து வைப்பதற்காக நாளை (2025 ஜூன் 23)  பாதுகாப்பு இணையமைச்சர் கென்யாவுக்குச் செல்கிறார். இரண்டாவது கட்டத்தில், 2025 ஜூன் 26 அன்று அண்டனானரிவோவில், மடகாஸ்கர் சுதந்திரம் அடைந்த 65 வது ஆண்டு விழா, மலகாசி ஆயுதப்படைகள் உருவாக்கப்பட்ட நாள் ஆகிய கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மடகாஸ்கருக்குச் செல்கிறார்.

இந்தியாவும் கென்யாவும் கடல்சார் ஒத்துழைப்பில் நெருங்கிப் பணியாற்றும் நாடுகள் ஆகும்.இரு நாடுகளுக்கும் இடையிலான உயர் நிலை பரிமாற்றங்கள், வர்த்தகம், முதலீடு, கென்யாவிலிருந்து மருத்துவப் பயணம், மக்கள் தொடர்புகள் போன்றவை அதிக அளவில் உள்ளன. காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் பொதுவான மரபை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்கின்றன. பல இந்தியர்கள் கென்யாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரித்து உள்ளனர்.

இந்தியாவும் மடகாஸ்கரும் வரலாற்று உறவுகள், பகிரப்பட்ட மதிப்புகள், பிராந்திய நிலைத்தன்மை, வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றில் வேரூன்றியுள்ளன. இந்த ஒத்துழைப்பு அரசியல், ராணுவம், பொருளாதாரம், ராஜதந்திர தளங்களில் பரவியுள்ளது. இது பரஸ்பர வளர்ச்சிக்கும், ஒத்துழைப்புக்குமான பகிரப்பட்ட பார்வையை எடுத்துக் காட்டுகிறது.

கென்யா, மடகாஸ்கர் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் அழைப்பை ஏற்று இந்த இரு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இந்திய  பாதுகாப்பு இணையமைச்சர் பயணம் மேற்கொள்கிறார்.

Leave a Reply